Tuesday, June 15, 2010

என் நட்பெனும் பரப்பு....

நீண்டு கிடக்கும்
மாலைப் பொழுதின்
நிழல் போல
மனமெங்கும்...
விரிந்து கிடக்கிறது
என் நட்பின் பரப்பு.....

அதில் விளைந்திருகும்
என் நட்புக்கள்
என்னோடு முரண்பட்ட
காலங்கள் அனைத்தும்
உதிர்ந்து கிடக்கின்றன
காய்ந்த சருகுகளாய்....

சிரிப்பு மழையில்
நனைந்து கொண்டும்
விவாத வெயிலில்
காய்ந்து கொண்டும்
ஒவ்வொரும் மரங்களும்
பசுமை பூத்தே நிற்கின்றன.......

அன்பெனும் தேவதை
அவ்வப்போது
ஆசி புரிந்து போனாலும்
வம்பெனும் சாத்தான்
வந்து போகிறான்
என் வார்த்தைகளின் வடிவில்...

முகம் பார்க்காத
என் நட்புமரங்கள்
அச்சமயங்களில்
நவக்கிரகங்களாய்
திரும்பிக் கொள்கின்றன
என்னுடன்.....

நல்லவனைத் தேடிய
துரியனாய்..
கெட்டவனைத் தேடிய
தர்மனாய்
நானும் என் நட்பை
தேடிக் கொண்டேயிருக்கிறேன்...

சிறகுகள் சுமையென
பறவைகள் சொல்லுமோ...
உதிர்ந்த இலைகளையும்
உரமாக்கிக் கொள்ளும்
என் நட்புமரங்கள்
கிளைகள் சுமையென சொல்லின...

ஒவ்வொரு கிளையாய்
உதிர்த்து உதிர்த்து...
ஒற்றை உடலும்
காற்றில் பறக்க....
கலைந்து போயின
என் நட்பின் தோட்டம்......

உதிர்த்த கிளைகளும்
மிச்சமிருக்கும் வேர்களுமாய்..
பிளந்து கிடக்கிறது
என் நட்பெனும் பரப்பு....
என் வார்த்தைச் சாத்தான்
வாய்ப்பிழந்து போனான்

அப்பொழுதும்...
அன்பெனும் தேவதை
ஆசிர்வதித்துப் போனது.....
என் நட்புப் பரப்பையும்
அதில் அமிழ்ந்து கிடக்கும்
வேர்களையும் கிளைகளையும்.........

ஒற்றைப் பனை....

எனது சோலையில்
எல்லா மலர்களும்
வாசங்களோடும்
வண்ணங்களோடும்
பூத்துக் குலுங்கின…

எனது வானத்தில்
எல்லா நாட்களிலும்
பௌர்ணமிகள்
ஓய்வேயில்லாமல்
ஒளிவீசிக் கொண்டிருந்தன…

அவ்வப்போது
மழைக்கால நேரங்களில்
வந்து போகும்
வானவில் கூட
நிலைத்தே நின்றது…

என் மனமென்னும்
பூமியின் மீது
நட்பெனும் பெருமழை
பெய்துகொண்டே இருந்தது
ஓய்வென்பதே இல்லாமல்…

சோலையில் பாடி
பௌர்ணமி ஒளியிலாடி
நட்பு மழையில்
நனைந்து கொண்டேயிருந்தேன்
விட்டு விட்டு….

அவ்வப்போது மின்னலும்
ஆச்சரிய்மாய் இடிகளும்
நட்பு மழையில்
தென்பட்டாலும்
பாதிக்கவே இல்லை…

இப்படி நீண்ட
கனவுகளோடே
நிறைந்திருந்தன என் இரவுகள்
பிறகுதான் தெரிந்தது
நிஜம் சோலையல்ல பனையென்பது..

கடற்கரையோரப் பனையாய்
என் காத்திருத்தல் நீண்டிருந்தது
வறண்ட ஓலைகளின் சலசலப்பில்
மிரண்டு ஒடின பறவைகள்..
கூடுகளை விட்டு…

பருவங்கள் மாறிப்போகும்..
சூழல்கள் மாறிப்போகும்
ஆனாலும் என்ன
பனையின் தவம்
நீண்டிருக்கும்…..முடிவில்லாமல்……..

பட்டாம் பூச்சி...........

காலங்காலமாய்
கனவுகளை கடைந்து...
நினைவுகளில் வடிகட்டி...
வயதுக்கும் வார்த்தைக்கும்
சம்பந்தமேயில்லாமல்..
நான் கோர்த்த
நட்பெனும் மலர்களே.........

கூட்டுப்புழுவாய்
இருந்தவனை
வண்ணத்துப் பூச்சியாய்
பறக்க வைத்தீர்.....

கூடு கிழித்து...
உற்சாகத்துடன்
பறந்து திரிந்தது
இந்த பட்டாம் பூச்சி....
மலர்களின் மீது பறந்திருந்த
வண்ணமே பாடித் திரிந்தது...

ஒரு சில மலர்கள்..
நான் பறக்கும் போது
என் சிறகுதிர்க்கும்
வண்ணங்களினால்..
தங்கள் வண்ணம் வாடுதென
வருத்தப்படுகின்றன....

பிறந்த காலையிலிருந்து
இந்த வனமொன்றே..
நந்த வனமென்றும்..
என் சொந்த வனமென்றும்
கருதிக்களித்த பட்டாம்பூச்சி...

சொந்தமென்று எதுவுமில்லை..
உறவொன்றும் நிலையில்லை..
வண்ணமது நீங்கிவிட்டால்
வண்ணத்துப் பூச்சிக்கு
மதிப்பில்லை...
என காலம் தாழ்த்தியே
கருத்தில் கொண்டது.....

சிறிது காலமாய்
வண்ணங்களை மட்டுமே..
வாரியிறைத்துக் கொண்டிருந்த
வண்ணத்துப் பூச்சி
முதல் முறையாய்
எண்ணங்களையும்
ஏறெடுக்கிறது.......

எல்லைகளற்ற சிறகுகளை
இதமாய் விரித்துப்
பறந்திருந்த பட்டாம்பூச்சி..
சிறகுகளை மடக்கிக்கொள்கிறது...
ஒற்றை நாள் உயிரிதானே...
வேறு நந்த வனம் தேடாது...

கூட்டுப்புழுவாக இயலாது
எனினும்..
உடைத்த கூட்டுக்குள்
ஒளிந்தாவது கொள்ளும்...
வண்ணங்கள் தந்த வாசமலர்களை
எண்ணங்களில் இருத்தியபடி......

நீ + நான் = நட்பு......

நான் சகுனியுமில்லை
நீ தர்மனும் இல்லை
நட்பு சதுரங்கத்தில்
நம்மை வைத்து சூதாட.........

உன்னோடு தேவர்கள் இருக்கலாம்
என்னோடு அசுரர்கள் இருக்கலாம்
ஆனாலும் நீ வாமனனும் இல்லை
நான் மாவலியும் இல்லை
என்னிடம் நீ கேட்டு
நான் தர................

நான் கர்ணனும் இல்லை
நீ துரியோதனனும் இல்லை
அங்க தேசத்தை நீ தரவும்
செஞ்சோற்று கடன் நான் தீர்க்கவும்...........

இருவரும் சாதாரண
மனிதர்கள் மட்டுமே.......
உணர்வுச் சுழல்களில்
உழல்பவர்கள் தானே.......

வெறுப்பது மனித குணம்
பொறுப்பது தேவ குணம்
விரும்புவது தெய்வ குணம்
இருந்தாலும்
நாம் மனிதர்கள்தானே........

நான் தேவனாகவுமில்லை
நீ தெய்வமாகவுமில்லை
என்றாலும்…
நண்பர்களாக இருக்கிறோம்…

வாய் தவறிய
வாரத்தைகளுக்கு
வருத்தம் தெரிவித்துக் கொள்வோம்
வழி மாறிய பாதையினை
செப்பனிட்டுக் கொள்வோம்…

கொள்கைகள் வேறுபடலாம்
குணங்களும் மாறுபடலாம்
இருந்து விட்டுப் போகட்டுமே…
நண்பர்கள்தானே…
நட்போடிருக்கலாம்…

உனதும் எனதுமான
ஒவ்வாத கொள்கைகளை
ஓரங்கட்டுவோம்…
நட்பாய் புன்னகைத்து..
நட்பாய் அரவணைத்து…
நட்பை புனரமைப்போம்…
நாளை நமதே என்ற நம்பிக்கையுடன்….

நட்பு(?)க்கு...............

வருத்தப்படுகிறாயா..???
பரவாயில்லை…
வெறுத்தே விடுவாயா???
தவறொன்றுமில்லை…

நகுதல் மட்டுமே
நட்பில்லை..
தேவையெனில்
நாணுதலும் தான்….

உள்ளத்தில் விகாரமாய்
ஒளித்து வைக்கவில்லை…
உதட்டுவழி நிதானமின்றி
உரைத்திடவுமில்லை…

மரபு விதி மாறாமல்
குறிப்புணர்த்தினேன்…
நமது நிலை தாழாமல்
வலியுறுத்தினேன்…

கருத்து வழி யுத்தங்களும்..
கவிதை வழிச் சண்டைகளும்..
சபையொன்றில்
சர்வசாதாரணமானவை..

பிஞ்சு நடை பிறழல்கள்
வழமையானவையெனினும்
காலடிகள் கவனமென்ற
கருத்துணர்த்தினேன்….

நெடுந்தொலைவுப் பயணத்தின்
நிலைவாசலில் நிற்கிறோம்..
வழிகளில் பழி வரலாம்..
வாசலில் வரலாமா?????

வருத்திக் கொள்ள
சொல்லவில்லை…
திருத்திக் கொள்ளவே
சொன்னேன்……

Wednesday, May 5, 2010

தழும்புகள்.......

உணர்வுகளின் வேகத்தில்
உரையாடும் உறவுகளுக்கு..
வரலாறாய் வாழ்ந்த
தலைவர்கள்
தங்களின் தவறுகளுக்கு
தடயங்களை விட்டு செல்வதில்லை
ஆனால்
தழும்புகளை விட்டு செல்கிறார்கள்…..

தடயம் தவிர்த்த
தழும்புகள்..
வருட்த்திற்கொருமுறை
வடிவங்கள் மாற்றிக்கொள்ளும்
ஆனாலும்
வலிகளை மீட்டிச்செல்லும்……

கனத்த போர்வையினை
கண் மீது கட்டிக்கொண்டு
இருட்டென கூறாதீர்…
யாரும் இங்கு நல்லவரில்லை..
யாரும் இங்கு தீயவரில்லை….

அரசியலில்
உணர்வுகளின் நிலையைவிட
அறிவுகளின் நிலைதான்
ஆட்சி செய்கிறது….
ஏனெனில் உணர்வுள்ளவன்
தொண்டனாகிறான்…
அறிவுள்ளவன் தலைவனாகிறான்…

உணர்ச்சிவசப்படும்போது
தன்னிலை மறத்தலியல்பு…
எனினும் தன்னிலை மறந்த
வார்த்தைகள்..முன்னிலும்
நிலையை மோசமாக்கும்…
"யாகாவாராயினும் நாகாக்க…"

வாள்முனையின் காயத்தை விட
வார்த்தைகளின் காயங்கள் வலிவானவை
அழியாத தழும்புகளை
அடையாளமாய் விட்டுச்செல்லும்..
கவனம்…
வாழ்வில் மட்டுமல்ல
வார்த்தகளிலும்தான்….

ஓ..மனிதா.....

ஓ..மனிதா.....
கால் கொண்டு நிலம் கடந்தாய்....
கலம் கொண்டு நீர் கடந்தாய்....
மதி நுட்பத்தால் விண்ணும் கடந்தாய்........
எனினும்...
உடல் கொண்டு
உயிர் கடைந்து...
உன்னுள்ளிருக்கும்
"நான்"
கடப்பதெப்போது..?????

என் மனமென்னும் காடு......

நாற்புறமும்
அகழியால் சூழப்பட்ட
கோட்டை போலவே
பொய்களால் வேயப்பட்ட
வேலிகளால் சூழப்பட்டிருக்கிறது
என் மனமென்னும் காடு.....

எண்ண விருட்சங்கள்,
ஆசை ஓடைகள்
அலங்கரிக்கும் காட்டில்
ரசனையெனும் பறவைகளோடு
வலம் வந்து கொண்டிருக்கின்றன
கோபமுடன் பொறாமை கலந்த
பொல்லாத மிருகங்கள்.......

அறிவுச் சூரியனின்
கதிர்கள் புகாதபடி
வளர்ந்து கிடக்கின்றன
ஆசை மரங்கள்.
ஆசை மரங்களின்
நிழல்களுக்குள்ளே
மண்டிக்கிடக்கின்றன
கொடிய விஷச் செடிகள்...

காட்டின் எல்லைகள்
கட்டுப்படுத்தவில்லை
என் ரசனைப் பறவைகளை...
அந்தப் பறவைகள்..
நீண்ட தொலைவுகளையும்
தொட்டுத் திரும்புகின்றன....

கோப மிருகங்களின்
பந்தாட்டத்தில் பலியாயின
அவ்வப்போது
சில ஆசை மரங்கள்...
ஆனாலும் விழுதுகளைக் கொண்டே
விளைந்து விடுகின்றன மீண்டும்...

காடு திருத்திக் கழனியாக்கவே
அரும்பாடு படுகிறேன் நான்
வானம் பார்த்த விவசாயியாய்
தோல்விகளையும் ஏமாற்றங்களையுமே
சந்தித்தாலும்
அடுத்த பருவத்திலாவது
அறுவடை செய்யலாம்
என்று ஆறுதலடைகிறேன்....

அல்லவை நீக்கி நல்லவை
தளைக்கவே ஆசைப்பட்டு
விஷச் செடிகளை
வேரோடு பிடுங்குகிறேன்....
ஒவ்வொரு செடியும்
வலிகள் கலந்த அனுபவங்களோடே
விடை பெறுகின்றன....

தொடர் தோல்விகளால்
துவண்டு விடாமல்
வேதாளம் வென்ற விக்கிரமாதித்தனாய்
விடாது முயல்கிறேன்...
நம்பிக்கையை விடாது முயல்கிறேன்....

என்றாவது ஓர் நாள்..
காடு திருத்தப்படும்
கனவுகள் மெய்ப்படும்.
நிழல்தரு தருக்களோடு....
கனி தரும் செடிகளோடு....
தாகம் தணிக்கும் ஓடையோடு....
கூடி விளையாடும் விலங்குகளோடு....
பாடித்திரியும் பறவைகளோடு....

பூத்துக்குலுங்கும் கொடிகளோடு
பூரித்துக்கிடக்கும்
என் மனமென்னும் காடு......

எங்கள் மீது பாயாதீர்…....

யார் வந்து போயென்ன??
ஐ.பி.எல் ல் அடங்கிருக்கிறது
எங்கள் ஆவி…..

தலைவனின் தாய் வந்தாராம்
யார் சொன்னது…???

தலைவனின் தாய் வந்தால்
சுவரொட்டி கூட ஒட்டப்படாமலிருக்குமா?
சுவரொட்டி கூட ஒட்டப்படவில்லையெனில்
வந்தது தலைவனின் தாயாய்த்தானிருக்குமா???

அட அப்படியேதானிருக்கட்டுமே…
வந்தவரை நாங்கள் சிறையிலடைக்கவில்லையே..
திருப்பி அனுப்பியிருக்கிறோம்
இதிலிருந்தே தெரியவில்லையா???
எங்களின் தயாளகுணம்..???

எப்பொழுது எது நேரினும்
உடனே எங்கள் மீது பாயாதீர்…

நாங்கள்
உடன் பிறப்பான ரத்தத்தின் ரத்தங்கள்..
கைராட்டை நூலோடு
உருண்டு கொண்டிருப்பவர்கள்…
உங்களுக்கு என்ன தெரியும்
எங்கள் நிலை…?????

ஒருவனின் தீக்குளிப்போடு
மயிர் நீத்த கவரிமானாய்
மானம் நீர்த்துப்போனோம்…

வாழும் பிணங்களோடு
வாதம் செய்யாதீர்….

சூதும் அதன் சூழலும்
அறிவோம் எனினும்
விதியின்மேல் பழி போட்டு
வீட்டுக்குள் முடங்கிக்கொள்வோம்

ஏனெனில்
நாங்கள் இந்தியனாய் பிறந்துவிட்ட
தமிழர்கள்……

முகம்..????

முகம் கொண்டு எடைபோட்டு..
முகம் கொண்டு மதிப்பிட்டு
முகம் கொண்டு பழகியதில்…
அகம் மட்டும் புரியவில்லை…

முகம் கண்டு மயங்குகிறோம்
முகம் கண்டு முயங்குகிறோம்
முகம் கண்டு அலைகின்றோம்
அகம் காண தயங்குகிறோம்….

முகம் காண அலைந்திருந்து
முகம் காண தவித்திருந்து
முகம் காண காத்திருந்தோம்..
அகம் காண அறியவில்லை

சுயங்கள் கொண்ட முரண்கள்........

மழை நாளின்
அந்தி வேளையில்
மழை நீரோடும்
மண் மணத்தோடும்
சந்தித்துக்கொண்டோம்......

மழை நீரில் நனைவது
பற்றி நனையாமல்
பேசிக்கொண்டிருந்தோம்...
ஆனால்...
நட்பெனும் பெருமழையில்
நனைந்து கொண்டிருந்தோம்....

உதடு தாண்டிய
வார்த்தைகளுக்குள்
ஒப்பு நோக்கிக்கொண்டோம்
உனக்கும் எனக்குமான
குணங்களையும் நலன்களையும்....

அதே நேரம்
உள்ளத்துக்குள்
குழி தோண்டி
புதைத்து வைத்திருந்தோம்..
உனக்கும் எனக்குமான
சுயங்களையும் முரண்களையும்....

பெருமழையின் பின்
நனைந்து கனிந்த
நிலம் போல
சில நாட்கள்,வாரங்கள்
இனித்து கிடந்தது
நம் நட்பு...

வெயில் காய காய
பாளம் விடும் பூமியாய்..
நாட்கள் செல்ல செல்ல
வெளிப்பட்டன
நீயும் நானும்
நமக்குள் புதைத்திருந்த
சுயங்கள் கொண்ட
முரண்கள்......

உனதும் எனதுமாய்..
இருவரின் சுயங்களும்
உரசும் நேரத்தில்
வெளிப்படும்
பொறிகளின் வெப்பத்தில்
குளிர் காய
காத்துக்கிடக்கின்றன
பிரிவின் வலிகள்........

நட்பெனும் பெருமழையில்
நனைந்தவாறே
இருப்பதால்
இதுவரை
முரண்களின் உரசல்கள்
உணரப்படவில்லை......

என்றாலும்...
வா.....
உள்ளத்துப் புதையலை
உதடுகள் தாண்டவிட்டு...
இட்டு நிரப்புவோம்...
நமக்குள்ளான
சுயங்கள் கொண்ட
முரண்களின் இடைவெளியை.....

சித்திரைப் பெருநாளாம்...

சித்திரைப் பெருநாளாம்...
சீர்மிகு திருநாளாம்...
இத்தரைத் தமிழர்க்கெல்லாம்
ஏற்றமிகு ஒருநாளாம்...

பொங்குக இன்பெமெல்லாம்
தணலிட்ட பாலாய்
தங்கட்டும் இன்பமெல்லாம்
மழலையின் சிரிப்பாய்...

விரோதி மாறி விகிர்தியாகி
விருப்பங்கள் யாவும்
இனிதே நிறைவேறி...
மங்கட்டும் துன்பமெல்லாம்
வெயில் கண்ட பனியாய்....

முக்கனிகளோடு
முத்தமிழும் சேர்த்து
இனிய வார்த்தைகளை
முக நகையோடு கோர்த்து...
வாழ்த்தி வரவேற்போம்....
வரவேற்று வாழ்ந்திடுவோம்...

இரவில் மழை இன்னும் அழகு....

மழை பெய்து..
மண் இளகி..
மரங்கள் கூட
மௌனங்களோடு
மகிழ்ந்திருந்த
குளிர்ந்த இரவு....

மின்மினிப் பூச்சிகள்
விளக்கணைத்து தூங்கின...
சில்வண்டுகளின் ரீங்காரம் கூட
சிறிதேனும் கேக்கவில்லை....
தூரத்து குட்டையில்...
துணை தேடும்
தவளைகளின் சத்தம் மட்டுமே..
இரவின் தனிமைக்கு துணையாய்....

மழை ஈரம் சுமந்த
காற்றின் விசாரிப்பில்...
மணம் மறந்து குவிந்திருந்தன
செடியில் பூக்கள்....
நட்சத்திரங்களின்
கண்சிமிட்டல் விசாரிப்பில்
நாணத்தோடு அலைந்திருந்தன
நீர்மேகங்கள்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்...

நிலத்தில் கால் வைக்க
உச்சிக்கு ஏறியது..
மழை நீரின் குளிர்...
புதிதாய்க் குழந்தை பெற்ற
தாய் போல
பூரித்துக் கிடந்தது பூமி...

மழை அழகு...
இரவில் மழை இன்னும் அழகு....
மழை பெய்த இரவு.....
மிக மிக அழகு....

மனதின் வலிகள்....

மௌனங்களால்
நிறைந்திருக்கிறது
மனதின் வலிகள்....

தனிமை எனும்
நீர்க்குளத்தில்
தனித்தே
தவமிருக்கிறது
ஆழ் மன விசாரங்கள்....

ஆறிப்போன தழும்பை
தேடிப்பிடித்து
கீறிப்பார்க்கும்
சுயவிரக்கங்கள்....

ஆனந்தமாய் வந்த
காற்றுகூட முகப்பூவின்
வறண்ட புன்னகை கண்டு
வாடிப்போகிறது....

இரவில் விளக்கணைத்து
இருட்டோடு ஒப்பாரி வைத்தே
கழிகிறது நேரங்கள்
கவனிப்பார் யாருமின்றி....

உணவையும் உறக்கத்தையும்
ஒரு சேர ஒதுக்கிவைத்து
பசிக்கு துக்கத்தையே
பரிமாறிக்கொண்டிருக்கிறது.....

விழிகளில் விதைத்திருந்த
காட்சிகளின் விதைகள்
கண்ணீர்ப்பூக்களையே
கணக்கின்றி விளைவிக்கின்றன....

நெருப்புக்கோழியாய்
மண்ணுக்குள் முகம்
புதைத்துக்கொள்ளவே
தவிக்கிறது மனது....

சுற்றம் தவிர்த்து
சோகங்களுக்குள் சுருண்டு
கொள்கிறது
நத்தையாய்.....

கவலைகளோடு
கவனிக்கிறது அறிவு...
காலம் மாற்றும் என்ற
நம்பிக்கையோடு.....

உலகம் ஓர்நாள் உன்வசப்படும்....

துன்புற்றோருக்கு உதவ
ஓடு
இறக்கம் கண்ட
நீராய்.....

வைதோரையும் வாழ்த்திப்
போ
வாசம் கொண்ட
காற்றாய்....

எல்லோருடனும் இனிதே
பழகு
பரந்து கிடக்கும்
வானாய்.....

தப்பைக் கண்டால்
பொங்கியெழு
வேகம் கொண்ட
தீயாய்.....

துயரம் கொண்டாலும்
பொறுமையாயிரு
நம்மைச் சுமக்கும்
நிலமாய்....

அனைத்திற்கும் மேலாய்....

கல்லெறிவோரையும்
சிறு புன்னைகையால்
தண்டித்து விடு....

உலகம் ஓர்நாள் உன்வசப்படும்.....

நீங்களும் இந்நாட்டு மன்னர் தானே???

அரசியல்......

அடித்தட்டு மக்களுக்கு
தொண்டராவதே புண்ணியம்

கொஞ்சம் வசதியிருப்பவனுக்கு
வெட்டி வேலை...

அறிவுஜீவிகளின் பார்வையில்
சாக்கடை...

அப்பாவிகளின் பார்வையில்
புரியாத புதிர்...

அரசியலில் இருப்போர்க்கு
கௌரவத்தின் மைதானம்

அரசுத்துறையினருக்கு
அளவில்லா அமுத சுரபி

கலைத்துறையினருக்கு
ஓய்வுகால உல்லாச விடுதி..

ஆசிரியர்களின் பார்வையில்
தீண்டாத பெருங்குற்றம்...

மாணவரின் பார்வையில்...
தொலை தூர தின்பண்டம்...

அப்படியாயின் அரசியல்
எங்கு அரசியலாக இருக்கும்.....

வாக்காளர்கள் எங்கு
விழிப்போடு இருக்கிறார்களோ

சாதி மத உணர்வுகள்
எங்கு சவப்பெட்டியில் இருக்கிறதோ....

நம்பிக்கை எங்கு
நடமாடுகிறதோ...

சுயநலம் எங்கு
தூக்கிடப்படுகிறதோ...

அங்கே அங்கே தான்
அரசியல் அரசியலாய் இருக்கும்...

வீசத்துக்கு மூன்று வாக்கு என
வீதியில் எறிந்துவிட்டு..

வேலைக்கு ஒருநாள் விடுமுறை
என்றிருந்து கொண்டு...

உங்களின் தவறுகளுக்கு
அரசியலை பழிக்காதீர்...

வழி மறிக்கும் கல்லை
அரசுதான் அகற்ற வேண்டும் என்றில்லை

நாமும் அகற்றலாம்...
நாட்டின் நலம் போற்றலாம்....

நிலம் சேரும் நீரின்
நிறம் போலவே

சேரும் இடத்திற்க்கேட்ப
சேரும் நிலைக்கேற்ப
அரசியல் புனிதமடைவதும்
புனிதம் கெடுவதும்.....

நீங்களும் இந்நாட்டு
மன்னர் தானே???

உங்கள் கை சுத்தம் தானே.....
உங்கள் உள்ளம் வெள்ளைதானே...
உங்கள் உணர்வுகள் உண்மைதானே...
உங்கள் திறம் உறுதிதானே...

வாருங்களேன் முயன்றுபார்ப்போம்
இயன்றவரை திருத்திப்பார்ப்போம்
திருந்தும் வரை வருந்திப்பார்ப்போம்
வெல்லும்வரை இணைந்திருப்போம்...

காடுகளின் சுயசரிதம்......

முன்னொரு காலத்தில்
இந்த பூமியின் நிலமெல்லாம்
நான் வேரோடியிருந்தேன்....
உயிர்கள் ஒவ்வொன்றாய்
உருவாகிக்கொண்டிருந்தன
என்னுள்.....

உருவாகும் ஒவ்வொரு
உயிர்களுக்கும் நான் மட்டுமே
ஆதாரமாயிருந்தேன்....

எல்லாம் இனிதாய்த்தான் இருந்தன
மனிதன் என்னும் உயிர்
என்னுள் உருவாகும்வரை....

நான்கு காலில் நடந்திருந்தவன்
இரண்டு காலில் நிற்க்கத்தொடங்கிய போது
ஆரம்பித்தன எனக்கான
அழிவின் அறிகுறிகள்....

தொட்டிலில் இருந்து
கட்டில் வரையில்
தேவைப்பட்டேன் விதம் விதமாய்
நாகரீக பாதையில் அவன்
நடமாட நடமாட
என் பரப்பளவுகள்
குறையத்தொடங்கின....

கடவுள் தந்த ஆறாம் அறிவு
எனும் அபாயத்தை
அன்று முதல் உணர ஆரம்பித்தேன்....

சென்ற நூற்றாண்டுவரை
பாதியாய் இருந்த என்னை
விஞ்ஞானத்தின் துணையோடு...
இருந்த அறிகுறிகளே
இல்லாமல் செய்து விட்டான்....

என்னைமட்டுமே அறிந்த உயிர்கள்
அழிந்து போயின...
தப்பிப் பிழைத்தவை
மிருககாட்சி சாலையில்
வாழ வகையின்றி
வாடிக்கொண்டிருக்கின்றன.....

என் பரப்பளவை சுருக்கியவன்
என் அங்கங்களையும் சுருக்கிவிட்டன
போன்சாய் மரங்களாய்
பூரித்து கிடக்கிரேணாம்
அவன் வீட்டு அலங்கார தொட்டியில்..

உணவிலிருந்து
உயிர் பிரிந்தபின்னால் செல்லும்
பாடை வரை தந்தேன்....
தாயின் பாசத்தோடு.....
அவனோ
நாகரீக காதலி கேட்டாள் என்று
என் அங்கங்கள் வாங்கிப்போனான்...
இன்றோ மீந்திருக்கும்
என் இதயமும் கேட்கிறான்....

கொடுக்க மறுத்தாலும்
பிடுங்கிப் போவான்....
எனவே தடுக்க நினைக்கவில்லை.....

ஆனால் என்ன
இதயம் தொடுமுன்னே
இடறி வீழ்கிறான்
தாங்கிப்பிடிக்க நினைத்தாலும்
இயலவில்லை....ஏனெனில்
அவன் காதலி அணிந்திருப்பது
என் அங்கங்கள் ஆயிற்றே....

என் அடையாளங்களில் மீந்திருக்கும்
இறுதி மரத்தினைக்கொண்டு
தயாரித்த காகிதத்தில்
நாளை முழக்கமிடுவான்
மரங்களை வளர்ப்போம் என்று....

காகித உருவில்
நான் கண்ணீர் சிந்துவேன்
மகனே என் மகனே
உன் வாழ்வு சிறக்க
என் வாழ்வை ஈந்தேன்
உன் வாழ்வு சிறக்கவில்லை
என் தியாகம் வீண் என்று....

நட்பு...

விரும்பினாலும்
விலகியிருப்பேன்
என்றது உறவு....
வெறுத்தாலும்
விரும்பியிருப்பேன்
என்றது நட்பு....

எடுக்கத்தெரிந்த
உறவுகளும்
கொடுக்கமட்டுமே தெரிந்த
நட்புகளுமாய்...
அனைவரது வாழ்விலும்
அவஸ்தைப்படுத்துகிறது உறவு..
அரவணைக்கிறது நட்பு...

நட்பாகும் உறவுகளில்லை
உறவாகும் நட்புகளுண்டு..
உறவினைத்தேர்ந்தேடுக்கும்
உரிமை நமக்கில்லை...
நட்பை தேர்ந்தெடுக்க
திறமை இன்னும் போதவில்லை...
ஏனெனில்
உறவு விதிப்பயன்
நட்பு மதியின் பயன்...

எத்தனை கட்சிகள்???

இந்திய தேசத்தில் தான்
எத்தனை கட்சிகள்???
நடக்கத் திராணியற்ற
நாற்காலிகளின் கட்சி ஓன்று
எதிர்காலம் தெரியாத
இறந்தகால கட்சி ஓன்று...
வரலாறு மறந்துவிட்ட
வர்க்கபேத கட்சி ஓன்று..

தலைவர்களால் நிறைந்துவிட்ட
தொண்டரில்லா கட்சி ஓன்று..
தொண்டர்களோடு தொடர்பில்லா
தலைவர்களின் கட்சி ஓன்று..
கட்சியே குடும்பமாக
குடும்பமே கட்சியாக
பரிணமித்துவிட்ட கட்சி ஓன்று..

ஓட்டுக்கேட்டு வரும்போது
ஒருகட்சி...
வாக்குவாங்கி வாழ்த்துரைக்கும்போது
ஒரு கட்சி...
பெட்டிகள் நிறைந்த ஜ(ப)னநாயகத்தில்
கொள்கைகளெல்லாம் குப்பையில்...

எதிர்கால இந்தியாவின்
இணையற்ற தூண்களுக்கு
என்ன செய்வதென்று
குளுகுளு அறையில்
கூடி விவாதிக்கின்றன
செல்லரித்த தூண்கள்...

இத்தனை ஆண்டு காலமாய்
மாறி மாறி தேடுகிறார்கள்
இரவில் பெற்ற அடிப்படை சுதந்திரம்
எங்கே என்று

பாவம் இன்று வரை தெரியவில்லை
அரசியல் கட்சிகளின்
கொள்கைகளோடு அதுவும்
அஸ்திவாரத்துக்கடியில்
புதைக்கப்பட்டிருக்கிறது என்று....

என்ன செய்ய நானும்
அரசியல் கட்சியொன்றின்
அடிப்படை உறுப்பினர்தானே...

எனவே நானும் தேடுகிறேன்
எனக்கான அடிப்படை உரிமைகளை...
இவர்கள் இருக்கும்வரை...
கிடைக்கப்போவதே இல்லை
என்று தெரிந்தும் கூட....

தோழமைக்கு நன்றி.....

தோழமைக்கு நன்றி.....

திடீர் நன்றியில்
திகைக்க வேண்டாம்...

நன்றிகள் நவில்வது நட்பில் இல்லை
என்றாலும்
நவிலாவிடில்
நட்பே இல்லை என்பதால்
இங்கு உரைக்கிறேன் இத்தனை நன்றி....

படுகுழியின் பசிக்கு
இரையாக இருந்தவனை
பாதை மாற்றி பயணிக்க வைத்தீர்...

கடமைப்பட்டிருப்பதால்
இங்கு நன்றி உரைக்கிறேன்

கர்வத்தையே கவசமாக்கி
என்னை காத்து வந்தேன்..
ஆயினும்
கவசம் தகர்த்த அம்புகள்
சில துளைத்து
வலிகள் தந்தன வடுக்களோடு....

வானரங்கள் நிறைந்த வனத்தில்
வாரணமாய் நீ மட்டுமா ?
என்ற வக்கரிப்புக் கேள்விகளால்
வாய் மூடி கிடந்தேன்...

உங்களால்
வானரங்கள் மட்டுமே வனமல்ல
என்றுணர்ந்தேன்....

இன்றோ...
ஆசை வலையில் அகப்படவில்லை
காதல் களத்தில் வீழவுமில்லை
மோகத்தீயில் வேகவுமில்லை
சோகப்பாயில் சுருளவுமில்லை

எண்ணங்கள் கொண்டு ஏங்கவுமில்லை..
வண்ணங்கள் கண்டு மயங்கவுமில்லை..
எண்ணித் துணிக கருமமென்றே
திண்ணம் கொண்டு தீர்மானித்துவிட்டேன்....

வழிகாட்டியாய்
வந்தமைந்த தோழமைக்கு நன்றி...
என் புலனுணர்த்திய போதனைக்கு நன்றி...
புறம் சிறக்கச் செய்த புரிதலுக்கு நன்றி...

அனைத்துக்குமேலாய்
துணையாய் இருக்கும் தோழமைக்கு நன்றி....

எரியட்டும் உணர்வுத்தீ.......

உணர்வுகளில் கனலேற்றி
உள்ளத்தில் ஊதிவிட்டு
விழிகள் திறந்து பார்....

உன் பார்வையின் வெப்பம்
படரட்டும் உலகெங்கும்.....

இதயத்தை பூட்டிவைத்து
இரக்கத்தை சாம்பலாக்கிய
இயந்திரங்கள் எரிந்துபோகட்டும்......

மரணத்தின் வாயிலில்
மனிதத்தை தள்ளிய
மகான்கள் மாண்டு போகட்டும்.......

நிலமெல்லாம் சிவப்பாக்கி
நீரெல்லாம் விஷமாக்கி
நினைவுகள் கருகச் செய்த
நீசர்கள் நீங்கட்டும்...

இழந்த உயிர்களுக்கு
இழப்பீடு வேண்டாம்......

இருக்கும் உயிர்களுக்கு
காப்பீடாகவாவது....
எரியட்டும் உணர்வுத்தீ......

உன்னுள்ளும் என்னுள்ளும்
மட்டுமல்ல......

உலகத்தில் உயிரோடு
இருப்பதை உணர்பவர்கள்
எல்லோருக்குள்ளும்....

Tuesday, March 23, 2010

இழந்தது மனிதம் மட்டும்.....

காக்கை இட்ட எச்சமாய்
கவனிப்பாரற்று கிடக்கிறது மனிதம்....

சிதறி கிடக்கும் பிணக்குவியலில்
உறைந்த ரத்தத்தின்
ஒவ்வொரு துளியிலும்
விரவிக்கிடக்கிறது
பகையின் வீச்சம்...

கடந்து போகும் காற்று கூட
கண்ணீர் விடுகிறது....
மனிதத்தின் நிலையை எண்ணி....

மகரந்தம் சொரியும்
மலர்கள் கூட கந்தகபுகையால்
கருகி கிடக்கின்றன..........

இறந்த உயிர்களின்
திறந்த கண்களூடே
நிறைந்து கிடக்கிறது
எதிர்கால ஏக்கங்கள்....

கடந்த நொடிகளில் நடந்தவை கண்டு
மௌனித்து போன சுற்றுப்புறத்தை
ஊடறுக்கிறது ஓர் ஓலக்குரல்..

இழந்ததும் அடைந்ததுமாய்
எண்ணிப்பார்க்கையில்
அடைந்தது எதுவுமில்லை.....
இழந்தது மனிதம் மட்டும்.....

என் நட்பின் வாசம்....

ஒரு விடுமுறை நாளின்
முன் மாலை பொழுதில்
ஏதோ தேட நேர்ந்த பொது
எதேச்சையாய் தட்டுப்பட்டது
என் மூன்றாம் வகுப்பின்
பாட நூல் ஓன்று.....

தூசு தட்டி
விரித்து பார்த்தேன்...
அடைசல் வாசனைக்குள்ளிருந்து
நலம் விசாரித்தது...
போலியறியாத என் நட்பின் வாசம்....

துவைக்கும் போதெல்லாம்
அம்மா திட்டும் மேல்சட்டை
தேய்ந்து கிழிந்து
தபால் பெட்டியான கால் சட்டை...
காற்றுக்கு இடமில்லாமல்
புத்தகங்களால் நிரப்பப்பட்ட
கனமான புத்தகப்பை.....

ஒழுகும் மூக்கும்
துடைத்த அடையாளங்களின் மிச்சங்களும்
வழியும் எண்ணையுடன்
அழுத்தி சீவப்பட்ட தலைமுடியும்
ஆனாலும் எது பற்றியும்
பயமோ கவலையோ ஏதுமறியாத
எனக்கே உரித்தான
புன்னகையோடே
பள்ளி சென்ற நாட்கள்....

என் குரல் பெரிதா உன் குரல் பெரிதா
என்னும் குரல் சண்டையில்
உரக்க படித்து உரைத்து படிக்காத
பள்ளிப் பாடங்கள்.....

ஐந்து பைசா ஆரஞ்ச் மிட்டாய்க்கு
ஐந்து பேர் பங்கு போட்டதும்
சட்டை வைத்து காக்காய் கடி போட்டதில்
சட்டை ஒட்டிய துணுக்குகளே
என் பங்கானதும்...

கோள் மூட்டி மூட்டி
நொச்சிகோல் முறிந்ததும்..
குட்டு வாங்கும் பயத்தில்
அக்குளில் வெங்காயம் வைத்து
காய்ச்சல் வர வைத்ததும்....

நான் தட்டிய தூசு
மறைவதற்குள்
ஓடுகிறது நிழற்படமாய்....
ஏக்கத்தோடு.....

என்றாவது ஓர் நாள்.............

என் கண் வழியே வழிவது
கண்ணீர் அல்ல பெண்ணே.......
உன் மீதான என்
அளவில்லா காதல்..........

ஓராயிரம் புன்னகைகள்...
ஓராயிரம் வார்த்தைகள்...
ஓராயிரம் பரிசுகள்...
இவை யாவும் உணர்த்தவில்லை.....

ஒற்றை கண்ணீர் துளியே
முழுதாய் உணர்த்தியது
என்னுள் இருக்கும் உன்னையும்
உன் மீதான என் காதலையும்.....

உன்னை பற்றி மட்டுமே
சிந்திக்கிறது மனம்
கடிவாளம் இட்ட
குதிரையாய்.....

உன்னை புரிந்த
என் இதயத்திற்கு
உன் சூழ்நிலை புரியவில்லை...
சொன்னாலும் கேட்கவில்லை....

காயங்களை கீறி
அதில் தெறிக்கும்
வலிகளை...கண்ணீரை ..
ரசிக்கிறது மனம்.......

என் செடியின்
வண்ண ரோஜா நீ
என் முட்கள் உன்னை காயப்படுத்தவே
முனைப்பாய் இருக்கின்றன........

தாயின் கருவறை...
இறுதியின் கல்லறை
இரண்டுக்கும் இடையே
உன் இதய அறை......

நினைவு வேலியிட்டு
அடை காத்து வா....
என் காதலை......

என்றாவது ஓர் நாள்

பொரிக்க கூடும்
என் காதலும் கனவுகளும்
கலந்த
என் கவிதை குஞ்சுகள்......

என் இதயத்தை
கண்ணீரால் கழுவி
கவிதைகளால்
அலங்கரித்து

காதலால் பூஜிக்கிறேன்
நீ அதில்
இருப்பதால்

மௌனமாய் இரு...

மௌனமாய் இரு...

புத்தனை போல...
புன்னகை தவழ....

உன்
உள்ளத்தின்
வார்த்தைகள்
உதடுகளை
தாண்ட விடாதே....

அவை
உன்னைபற்றியாயினும்
உன்னோடிருப்பவரை பற்றியாயினும்..

நன்மையோ? தீமையோ?
நாவை அடக்கிக்கொள்...
அது
நன்மையே பயக்கும்.....

நிறைவேறாத ஆசைகளை
நினைவுபடுத்தாதே...
அது
நிம்மதியை
குலைத்து விடும்.......

மீனுக்கு உணவு
புழுக்கள்தான்
என்றாலும்
தூண்டிலில் இருக்கும் போது
அவையே
எமனாகவும் மாறக் கூடும்...

அது போலவே
ஆசைப்படு தவறில்லை...
ஆனால்...
ஆசைகள் நிறைவேறும் என்றால் மட்டும்....

இல்லையெனில்...
ஆசைப்பட்ட காரணத்தினாலே
அசிங்கப்பட்டும் போவாய்...

கவனம்
மௌனம்
சிறந்த மருந்து
மனதின் காயங்களுக்கு......

நாய்க்குட்டி மனது.....

புன்னைகைக்கும்
உதடுகள் தெரிவிக்கவில்லை...
உள்ளத்தின் வலிகளை...

கனக்கும் மனத்தின்
வாயில்களாய்
கண்கள் மட்டுமே
கலங்கிக் கொண்டு.........

நிஜங்கள் தந்த
வலிகளை விட
உன்
நினைவுகள் தந்த
வலிகள்
கொடுமையானவை...............

இப்படியிருந்திருந்தால்.........
என்
இழந்த தருணங்களுக்காக
ஏங்குகிறது மனது......

நாய்க்குட்டி மனதுதான் எனது..
எச்சத்தை எவர் போட்டாலும்
தின்றுவிட்டு
வலாட்டிக்கொண்டே
பின்னால் போகிறது
விரட்ட விரட்ட..................

எச்சமிட்டவருக்கு
தெரிந்திருக்கலாம்...
நாய்க்குட்டியின் மனது

நாய்க்குட்டிக்கு தெரியமா ?
எச்சமிட்டவரின் மனது??

எங்கோ எறிய வேண்டிய
மிச்சத்தை
இங்கே எறிந்தார் என்று......

எறிந்ததும் குற்றமில்லை..
தின்றதும் குற்றமில்லை..
வாலாட்டிக்கொண்டே
போனதுதான் குற்றம்......

என்ன செய்ய....
நாய்க்குட்டி
என்றுமே...
நாய்க்குட்டி தான்........

என் கிராமத்து நாட்கள்....

இனிய குருவிகளின்
இன்னிசையோடு
மெல்ல விடிந்திருந்தன
என் கிராமத்து நாட்கள்....

கரையோர நடையோடு
கருவேலங்க்குச்சி பல்துலக்கல்
அரப்பு வைத்த தலையோடு
கிணற்றடி குளியல்.....

திசையெங்கும் வீற்றிருக்கும்
தெய்வங்களின் தரிசனத்தோடு
பசியையும் ரசித்தவாறே
பறவைகளுடனும் பக்கத்துடனும்
பகிர்ந்துண்ணல்......

நுங்கு வண்டிப் பந்தயங்கள்
மாட்டு வண்டிப் பயணங்கள்
வெற்றிலை சிவப்போடு
வெள்ளந்திப் புன்னகைகள்...

அரச இலைப் புல்லாங்குழலோடு
ஆற்றங்கரை விளையாட்டுக்கள்
ஊர்த்திருவிழாவில்
உறவுகளோடு உலாவல்....

வெட்டுக்குத்து இல்லாமல்
எந்த விழாவும் நிறையவில்லை
ஆனாலும் ஊர்ப்பாசம்
குறையவே இல்லை...

ம்ம் என்ன செய்ய....

நினைவுகள் மட்டுமே
இனிக்கின்றன என் கிராமம் போல
நிஜங்கள் எப்போதும்
கசக்கின்றன
உங்கள் நகரம் போல...

என் வாழ்வின் தேவைகளை.....

அதிகாலை சிட்டுக்குருவியின் இன்னிசை...
தட்டில் வந்து கொத்தித்தின்னும் காக்கா...
அழகாய் அசைபோடும் பண்டங்கள்....
அமைதியாய் இருக்கும் என் கிராமம்....

வரி வரியாய் உழுதுவிட்ட காடுகள்..
வரப்பின் மேல் தவமிருக்கும் நாரைகள்...
காற்றெல்லாம் மணம் பரப்பும் பூக்கள்...
நிலமெல்லாம் நிழல் பரப்பும் மரங்கள்....

ஊரெல்லாம் ஓய்வெடுக்கும் சாவடி...
அனல்பறக்கும் ஆடு புலி ஆட்டம்....
விளையாடிக் களித்திருந்த புழுதிக்காடு....
களைப்போடு கண்ணயர்ந்த மாமரத்தடி...

வளையோடு வேய்ந்திருக்கும் எனது வீடு....
நான் உண்டுறங்கி வளர்ந்திருந்த வீட்டுத்திண்ணை.....
அவசர தேவைகளுக்கு அண்ணாச்சி மளிகைக்கடை...
அவசர உதவிக்கு அடுத்த வீட்டு அப்பத்தா....

அம்மா கைபட்ட அதிரசம்...
அத்தை அன்போடு சுட்டுத்தந்த நெய்முறுக்கு.....
பாசத்தோடு பறிமாறிய பழையசோறு....
நேசம் நிறைந்திருந்த நீர்மோர்......

எங்கு தேடியும் கிடைக்கவில்லை நகரத்தில்....
என்ன செய்ய....
வாழ்வின் தேடல்கள் கிராமத்திலும்
வாழ்வின் தேவைகள் நகரத்திலுமாய்.....

புன்னகை மறைத்த பொய்களோடு
இதயம் தொலைத்து தேடுகிறேன்...
தேடல்களை தவிர்க்க வைத்த
என் வாழ்வின் தேவைகளை.....

வேங்கைகளின் மைந்தர்களுக்கு...

நிகழ்கால நெருடல்களுக்குள்
எதிர்கால ஏக்கங்கள்
புதைந்திருக்கலாம்....

இறந்த கால கனவுகளில்
சில எப்போதோ
சிதைந்திருக்கலாம்....

சூழ்நிலைக்கு தக்கவாறே
சுய நம்பிக்கை
தளர்ந்திருக்கலாம்...

உதவுவார் யாருமின்றி
உலகமே
தனித்திருக்கலாம்....

நாயினும் கீழாய்
நம்மை சிலர்
மதித்திருக்கலாம்....

தன்மானம் தவிர்த்த சிலர்
நம்மைவிட்டு
பிரிந்திருக்கலாம்....

வேலிகளுக்கிடையே
சில வரலாறுகள்
முடக்கப்பட்டிருக்கலாம்....

எதுவானால்தான் என்ன????
நீயும் நானும்
உயிருடன்தானே இருக்கிறோம்...

விருட்சங்கள் தாங்கும்
விதைகளாய்
கடமைகள் தாங்கி நிற்போம்....

வருந்திய வரலாறுகள்
திருந்தும் வரை
வா இணைவோம்....

உன் வார்த்தையின் வருடல்களுக்காக......

உனக்குமெனக்குமான
கடந்த கால உரையாடல்கள்
ஒவ்வொரு முறை படிக்கும்போதும்
ஒவ்வொரு அர்த்தத்தை தருகின்றன......
என் மன நிலைக்கேற்றவாறு.........

நீயும் நானும்
சராசரிகளின் மீதங்களாகவே
சந்தித்துக் கொண்டோம்...
என்றாலும்...
எங்கோ தவறிய ஒரு நொடியில்
சரி பாதியாய் மாறி விட்டோம்......

அப்படி என்ன இருக்கிறது
எனக்கும் உனக்குமான
இந்த காதலில்...???????

வார்த்தைகள் வக்கிரப்படவில்லை
மாறாக வசீகரிக்கின்றன....

விருப்பங்கள் நிறைவேறா விட்டாலும்
பரஸ்பர புரிதலோடு
பகிர்ந்து கொள்ளப் படுகின்றன.....

உன்னை சந்திக்குமுன்...
என் கனவுகளில் உயிர் வாழ்ந்தேன்....

உன்னை சந்தித்த பின்னரோ
உன் நினைவுகளில் மட்டுமே
வாழ்கிறேன்............

சுகங்களை விட
ஏக்கங்களின் வலியே அதிகம்
என்றாலும்...
தருவது நீயென்பதால்
புன்னகையோடு...
என் இமைவழியும் நீரை
உள்ளிழுக்கிறேன்.......

சராசரி என்றால்
சண்டையாவது போடலாம்
நீ என் சரிபாதி ஆயிற்றே..
என்ன செய்ய....

கண்ணீர்க் குளத்தில்
கண்களை நீந்த விட்டு
கனவுகளுக்கு வலை விரித்து
காத்திருக்கிறேன்.....

வாய் மூடி இருக்கிறேன்
வலிகளோடு...
எப்பொழுதாவது
கிடைக்கும்
உன் வார்த்தையின்
வருடல்களுக்காக......

Monday, March 22, 2010

நானும் என்னோடு மழை நாட்களும்.....

என்னவளுக்கு....
எங்கு தேடியும் கிடைக்கவில்லை
உனது முகவரி....

என்றோ ஓர் மழை நாளின்
மதியத்தில்....
மழை நீரின் குளுமையோடு
எனைக்கடந்து போனாய் நீ...

அன்றோடு
மண் சேர்ந்த மழை நீராய்
நான் மாறிப்போனேன்...

மழையோசை மீறிய
உன் வளையோசைகள்
ஒலித்துககொண்டே இருந்தன
நீ போன பின்னும்....

எங்கோ திரிந்திருந்த
என் நினைவுகள்
உன் மீது
மையம் கொண்டது அன்றிலிருந்து....

அன்று முதல்
எல்லா மழை நாட்களிலும்
நனைந்து கொண்டேயிருக்கிறேன்...

நீ என்னை கடந்து
போவாய் என்ற நம்பிக்கையில்...

வருடங்கள் ஓடியது
வயோதிகம் கூடியது
நிகழவேயில்லை உன் வருகை...

ஆனாலும்
காத்துக்கொண்டிருக்கிறோம்
என்றேனும் நீ வருவாய்
என்பதற்காக

நானும்
என்னோடு
மழை நாட்களும்.....

நன்றி பெண்ணே(?)....

நன்றி பெண்ணே(?)....
அனைத்திற்கும் நன்றி...

இதயம் சிதைத்த காதலுக்கு நன்றி...
இரவை வெறுத்த உன் நினைவுகளுக்கு நன்றி...
பகலைத் தொலைத்த உன் பாசத்திற்கு நன்றி...
பாராமுகமாய் நீ போவதற்கும் நன்றி....

கனவுகளை வளர்த்த உன் கண்களுக்கு நன்றி..
கவிதைகள் விதைத்த உன் வார்த்தைக்கு நன்றி...
காலம் கடந்த உன் அன்பிற்கு நன்றி....
கண்மூடி இன்று போவதற்கும் நன்றி.......

என் காதலை களங்கப் படுத்தியமைக்கு நன்றி...
என் நட்பையே தவறாக்கிய உன் திறமைக்கு நன்றி..
என்னை நம்பிய உன் நம்பிக்கைக்கு நன்றி...
உண்மை உரைத்த உன் உள்ளத்துக்கு நன்றி.....

என்னை இன்று ஊமையாய் செய்ததற்கு நன்றி...
என் மௌனத்தின் பின்னாலான உன் வரிகளுக்கு நன்றி...
காதலெனும் பேரில் நீ தந்த காயத்துக்கு நன்றி...
பொய்யைக்கூட பொருத்தமாய் சொன்னதற்கு நன்றி...

மெல்ல விலகும் இருளுக்கு நன்றி...
என்னை விழித்தெழ வைத்த நொடிகளுக்கு நன்றி...
விருப்பத்தோடு உன்னை வெறுக்க வைத்தாய் நன்றி...
திரும்ப என் வாழ்வில் வராதிருந்தால் கோடி நன்றி....

நான் கொண்ட தோழமைகள்....

உன் விழி மீட்டிய
என் இதயத்தில்
இசையாய் கிளர்ந்தெழுந்தது
என் காதல்.......

அதில்...
ஒலியாய் நானும்
மௌனமாய் நீயும்...
சங்கமித்துகொண்டோம்....

ஒலிகளால் நிரம்பிய நேரங்களில்
சிறு மௌனம்கூட இசையாகும்
என்பதைக்கூட
அன்றுதான் அறிந்தேன்.....

காதலா காமமா என்றறியாத
உனது வேட்கையின் விதைகள்..
காதல்
விருட்சமாய் படர்ந்தது
எனக்குள்....

நமது காதலை
நீ வாசித்தாய்...
நான் சுவாசித்தேன்..
வாசிப்பு வக்கிரப்பட்டபோது
சுவாசிப்பு தடைபட்டது...

அன்பால் உருவான என் இதயம்
உன்னால்
ஆயிரம் துண்டுகளாக்கப்பட்டது
அப்போதுதான்....

ஒவ்வொரு துண்டுகளிலும்
உன்னையே பார்த்து
அழுவேன் என்று கூட
நீ நினைத்திருக்கலாம்....

ஆனால்
ஒவ்வொரு துண்டுகளிலும்
நட்சத்திரமாய் மின்னியது
நான் கொண்ட தோழமைகள்....
இருண்டவானின் விடிவெள்ளிகளாய்...

உன்னை சந்திக்காமலிருந்திருந்தால்
சந்திக்கவே இயலாமல் போயிருக்கும்
என் வானின் நட்சத்திரங்களை....

உன்னை மறக்க நினைக்கவில்லை....
நன்றிக்குரியவளாகவே
வணங்க நினைக்கிறேன்...
எனக்கான தோழமைகளை
இனம்பிரித்துக் காட்டியதற்கு....

வானின் முதல் துளி........

வானின் முதல் துளி
அதுவே
மண்ணின் உயிர்த்துளி...

தூறலாய் பெய்து
குழந்தையாய் கொஞ்சும்...

சாரலாய் மாறி
காதலியாய் சிணுங்கும்...

பருவத்தோடு பெய்து
தாயாய் அரவணைக்கும்....

சில சமயம்
அரசனாய் கோபப்படும்
ஆத்திரம் தீர அடிக்கும்

அடை மழை
ஆலங்கட்டி மழை
தட்ப வெட்பத்துக்கேட்ப
பருவ மழை....
புரட்டிப் போடும்
புயல் மழை...

பெய்தும் பெய்யாமலும்
கொடுத்தும் எடுத்தும்

இன்று வரை
அகிலத்தின் ஆணிவேராய்
கடலுக்கும் வானத்துக்கும்
இடையே கைவீசி நடக்கும்....

பருவநிலை சீர்கேடுகளால்
அமில மழை பெய்யுமாம்
அறிந்தவர்கள் சொல்கிறார்கள்...

என்றோ பெய்யும்
அதைப்பற்றி நமக்கென்ன கவலை

சுற்றுப்புறம் சீரழிந்தால் நமக்கென்ன?
நம் சொந்தப்புறம் நன்றாகவே உள்ளது...

முன்னோர் வளர்த்த காடு...
மூளியாகி பெருநகரமானது
நம்மால்...

நம் பிள்ளைகள் அந்த தவறை
மீண்டும் செய்ய முடியாது
ஏனெனில்
நாம்தான் காடுகளே வளர்க்கவில்லையே....

எப்படியாயின் என்ன?
அமில மழை பெய்வதற்குள்
அழி(ந்)த்துவிடுவோம்
மரங்களோடு நாமும்....

அமில மழை பெய்யும் நாளில் மட்டும்
வானின் முதல் துளி
மண்ணின்
கண்ணீர்த்துளி....

நீ தந்த காதலோடும்.....

உனக்காக விழித்திருந்த
உறக்கம் தொலைத்த இரவுகள்....

உனக்காக தவித்திருந்த
இரக்கமில்லா பொழுதுகள்....

உன் குரல் கேட்க காத்திருந்த
என் கேட்காத செவிகள்....

உன் முகம் பார்க்க ஏங்கியிருந்த
என் பார்வை இல்லா விழிகள்........

உணவு தவிர்த்த பொழுதுகளில்
உன் நினைவு மட்டுமே.....

என் செய்து என்ன??????
நீயும் நானும்....
நீண்ட தொலைவுகளிடையேயும்
நீங்காத நினைவுகளிடையேயும்....

போதும் பெண்ணே...
இந்த பொல்லாத காதல்...

வலிகளை தாங்குவேன் என்றாலும்
வலிகள் மட்டுமே
வாழ்க்கையல்ல........

கனவுகள் கருக்கொள்ளும் போதே
கலைக்கப் படுகின்றன...

நிறைவேறாத ஆசைகளிடையே
நிறைந்து கொண்டிருக்கிறது..
உனக்கான என் பொழுதுகள்...

நீ தந்த காதலோடும்.....
நான் கொண்ட ஏக்கத்தோடும்......

பின்னிசையாய்.....

உயர்ந்த மலை ஒன்றின்
உச்சியில்
அமர்ந்திருக்கிறேன் நான்....
புன்னகையோடிய பொய்களின்
ஆடைகளற்று
நிஜங்களின் நிர்வாணத்தோடு....

தலைதடவிப் போகும்
மேகங்களின் வருடலோடு
விழிமூடி ரசித்திருக்கிறேன்
என் மேல் பெய்யும் மழையை...

ஒலிகளற்ற மௌனத்தின்
உன்ன்னதத்தில்
உலகம் மறந்திருந்த நேரத்தில்.......
நடந்தவை அனைத்திற்கும்
மௌன சாட்சியாய் நின்றிருக்கும்
மலையோடு
மனித சாட்சியாய் நானும்.........

பொழியும் மழை
கழுவிப்போகிறது
மனமென்னும் குப்பைத்தொட்டி
சேகரித்து வைத்திருந்த
என் நினைவுகளின் அழுக்குகளை....

உடல்தடவிப் போன
ஊதல் காற்றில்
உயிர் சிலிர்த்த நொடிகளில்
புதிதாய் பிறந்ததாய் உணர்வு...

புதிய நம்பிக்கையோடு
புறப்படுகிறேன்
கீழிறங்கும் வழியெல்லாம்
மலை தாங்கி நிற்கும்
மரங்களின் கிளைகளில்
முளைத்த இலைகளிலிருந்து
விழுகின்றன.....

எனைக்கழுவிப்போன
மழைத்துளிகள்....
என் மனம் பாடும்
பாடலுக்கு
பின்னிசையாய்.....