Monday, March 22, 2010

நான் கொண்ட தோழமைகள்....

உன் விழி மீட்டிய
என் இதயத்தில்
இசையாய் கிளர்ந்தெழுந்தது
என் காதல்.......

அதில்...
ஒலியாய் நானும்
மௌனமாய் நீயும்...
சங்கமித்துகொண்டோம்....

ஒலிகளால் நிரம்பிய நேரங்களில்
சிறு மௌனம்கூட இசையாகும்
என்பதைக்கூட
அன்றுதான் அறிந்தேன்.....

காதலா காமமா என்றறியாத
உனது வேட்கையின் விதைகள்..
காதல்
விருட்சமாய் படர்ந்தது
எனக்குள்....

நமது காதலை
நீ வாசித்தாய்...
நான் சுவாசித்தேன்..
வாசிப்பு வக்கிரப்பட்டபோது
சுவாசிப்பு தடைபட்டது...

அன்பால் உருவான என் இதயம்
உன்னால்
ஆயிரம் துண்டுகளாக்கப்பட்டது
அப்போதுதான்....

ஒவ்வொரு துண்டுகளிலும்
உன்னையே பார்த்து
அழுவேன் என்று கூட
நீ நினைத்திருக்கலாம்....

ஆனால்
ஒவ்வொரு துண்டுகளிலும்
நட்சத்திரமாய் மின்னியது
நான் கொண்ட தோழமைகள்....
இருண்டவானின் விடிவெள்ளிகளாய்...

உன்னை சந்திக்காமலிருந்திருந்தால்
சந்திக்கவே இயலாமல் போயிருக்கும்
என் வானின் நட்சத்திரங்களை....

உன்னை மறக்க நினைக்கவில்லை....
நன்றிக்குரியவளாகவே
வணங்க நினைக்கிறேன்...
எனக்கான தோழமைகளை
இனம்பிரித்துக் காட்டியதற்கு....

No comments:

Post a Comment