Tuesday, June 15, 2010

என் நட்பெனும் பரப்பு....

நீண்டு கிடக்கும்
மாலைப் பொழுதின்
நிழல் போல
மனமெங்கும்...
விரிந்து கிடக்கிறது
என் நட்பின் பரப்பு.....

அதில் விளைந்திருகும்
என் நட்புக்கள்
என்னோடு முரண்பட்ட
காலங்கள் அனைத்தும்
உதிர்ந்து கிடக்கின்றன
காய்ந்த சருகுகளாய்....

சிரிப்பு மழையில்
நனைந்து கொண்டும்
விவாத வெயிலில்
காய்ந்து கொண்டும்
ஒவ்வொரும் மரங்களும்
பசுமை பூத்தே நிற்கின்றன.......

அன்பெனும் தேவதை
அவ்வப்போது
ஆசி புரிந்து போனாலும்
வம்பெனும் சாத்தான்
வந்து போகிறான்
என் வார்த்தைகளின் வடிவில்...

முகம் பார்க்காத
என் நட்புமரங்கள்
அச்சமயங்களில்
நவக்கிரகங்களாய்
திரும்பிக் கொள்கின்றன
என்னுடன்.....

நல்லவனைத் தேடிய
துரியனாய்..
கெட்டவனைத் தேடிய
தர்மனாய்
நானும் என் நட்பை
தேடிக் கொண்டேயிருக்கிறேன்...

சிறகுகள் சுமையென
பறவைகள் சொல்லுமோ...
உதிர்ந்த இலைகளையும்
உரமாக்கிக் கொள்ளும்
என் நட்புமரங்கள்
கிளைகள் சுமையென சொல்லின...

ஒவ்வொரு கிளையாய்
உதிர்த்து உதிர்த்து...
ஒற்றை உடலும்
காற்றில் பறக்க....
கலைந்து போயின
என் நட்பின் தோட்டம்......

உதிர்த்த கிளைகளும்
மிச்சமிருக்கும் வேர்களுமாய்..
பிளந்து கிடக்கிறது
என் நட்பெனும் பரப்பு....
என் வார்த்தைச் சாத்தான்
வாய்ப்பிழந்து போனான்

அப்பொழுதும்...
அன்பெனும் தேவதை
ஆசிர்வதித்துப் போனது.....
என் நட்புப் பரப்பையும்
அதில் அமிழ்ந்து கிடக்கும்
வேர்களையும் கிளைகளையும்.........

ஒற்றைப் பனை....

எனது சோலையில்
எல்லா மலர்களும்
வாசங்களோடும்
வண்ணங்களோடும்
பூத்துக் குலுங்கின…

எனது வானத்தில்
எல்லா நாட்களிலும்
பௌர்ணமிகள்
ஓய்வேயில்லாமல்
ஒளிவீசிக் கொண்டிருந்தன…

அவ்வப்போது
மழைக்கால நேரங்களில்
வந்து போகும்
வானவில் கூட
நிலைத்தே நின்றது…

என் மனமென்னும்
பூமியின் மீது
நட்பெனும் பெருமழை
பெய்துகொண்டே இருந்தது
ஓய்வென்பதே இல்லாமல்…

சோலையில் பாடி
பௌர்ணமி ஒளியிலாடி
நட்பு மழையில்
நனைந்து கொண்டேயிருந்தேன்
விட்டு விட்டு….

அவ்வப்போது மின்னலும்
ஆச்சரிய்மாய் இடிகளும்
நட்பு மழையில்
தென்பட்டாலும்
பாதிக்கவே இல்லை…

இப்படி நீண்ட
கனவுகளோடே
நிறைந்திருந்தன என் இரவுகள்
பிறகுதான் தெரிந்தது
நிஜம் சோலையல்ல பனையென்பது..

கடற்கரையோரப் பனையாய்
என் காத்திருத்தல் நீண்டிருந்தது
வறண்ட ஓலைகளின் சலசலப்பில்
மிரண்டு ஒடின பறவைகள்..
கூடுகளை விட்டு…

பருவங்கள் மாறிப்போகும்..
சூழல்கள் மாறிப்போகும்
ஆனாலும் என்ன
பனையின் தவம்
நீண்டிருக்கும்…..முடிவில்லாமல்……..

பட்டாம் பூச்சி...........

காலங்காலமாய்
கனவுகளை கடைந்து...
நினைவுகளில் வடிகட்டி...
வயதுக்கும் வார்த்தைக்கும்
சம்பந்தமேயில்லாமல்..
நான் கோர்த்த
நட்பெனும் மலர்களே.........

கூட்டுப்புழுவாய்
இருந்தவனை
வண்ணத்துப் பூச்சியாய்
பறக்க வைத்தீர்.....

கூடு கிழித்து...
உற்சாகத்துடன்
பறந்து திரிந்தது
இந்த பட்டாம் பூச்சி....
மலர்களின் மீது பறந்திருந்த
வண்ணமே பாடித் திரிந்தது...

ஒரு சில மலர்கள்..
நான் பறக்கும் போது
என் சிறகுதிர்க்கும்
வண்ணங்களினால்..
தங்கள் வண்ணம் வாடுதென
வருத்தப்படுகின்றன....

பிறந்த காலையிலிருந்து
இந்த வனமொன்றே..
நந்த வனமென்றும்..
என் சொந்த வனமென்றும்
கருதிக்களித்த பட்டாம்பூச்சி...

சொந்தமென்று எதுவுமில்லை..
உறவொன்றும் நிலையில்லை..
வண்ணமது நீங்கிவிட்டால்
வண்ணத்துப் பூச்சிக்கு
மதிப்பில்லை...
என காலம் தாழ்த்தியே
கருத்தில் கொண்டது.....

சிறிது காலமாய்
வண்ணங்களை மட்டுமே..
வாரியிறைத்துக் கொண்டிருந்த
வண்ணத்துப் பூச்சி
முதல் முறையாய்
எண்ணங்களையும்
ஏறெடுக்கிறது.......

எல்லைகளற்ற சிறகுகளை
இதமாய் விரித்துப்
பறந்திருந்த பட்டாம்பூச்சி..
சிறகுகளை மடக்கிக்கொள்கிறது...
ஒற்றை நாள் உயிரிதானே...
வேறு நந்த வனம் தேடாது...

கூட்டுப்புழுவாக இயலாது
எனினும்..
உடைத்த கூட்டுக்குள்
ஒளிந்தாவது கொள்ளும்...
வண்ணங்கள் தந்த வாசமலர்களை
எண்ணங்களில் இருத்தியபடி......

நீ + நான் = நட்பு......

நான் சகுனியுமில்லை
நீ தர்மனும் இல்லை
நட்பு சதுரங்கத்தில்
நம்மை வைத்து சூதாட.........

உன்னோடு தேவர்கள் இருக்கலாம்
என்னோடு அசுரர்கள் இருக்கலாம்
ஆனாலும் நீ வாமனனும் இல்லை
நான் மாவலியும் இல்லை
என்னிடம் நீ கேட்டு
நான் தர................

நான் கர்ணனும் இல்லை
நீ துரியோதனனும் இல்லை
அங்க தேசத்தை நீ தரவும்
செஞ்சோற்று கடன் நான் தீர்க்கவும்...........

இருவரும் சாதாரண
மனிதர்கள் மட்டுமே.......
உணர்வுச் சுழல்களில்
உழல்பவர்கள் தானே.......

வெறுப்பது மனித குணம்
பொறுப்பது தேவ குணம்
விரும்புவது தெய்வ குணம்
இருந்தாலும்
நாம் மனிதர்கள்தானே........

நான் தேவனாகவுமில்லை
நீ தெய்வமாகவுமில்லை
என்றாலும்…
நண்பர்களாக இருக்கிறோம்…

வாய் தவறிய
வாரத்தைகளுக்கு
வருத்தம் தெரிவித்துக் கொள்வோம்
வழி மாறிய பாதையினை
செப்பனிட்டுக் கொள்வோம்…

கொள்கைகள் வேறுபடலாம்
குணங்களும் மாறுபடலாம்
இருந்து விட்டுப் போகட்டுமே…
நண்பர்கள்தானே…
நட்போடிருக்கலாம்…

உனதும் எனதுமான
ஒவ்வாத கொள்கைகளை
ஓரங்கட்டுவோம்…
நட்பாய் புன்னகைத்து..
நட்பாய் அரவணைத்து…
நட்பை புனரமைப்போம்…
நாளை நமதே என்ற நம்பிக்கையுடன்….

நட்பு(?)க்கு...............

வருத்தப்படுகிறாயா..???
பரவாயில்லை…
வெறுத்தே விடுவாயா???
தவறொன்றுமில்லை…

நகுதல் மட்டுமே
நட்பில்லை..
தேவையெனில்
நாணுதலும் தான்….

உள்ளத்தில் விகாரமாய்
ஒளித்து வைக்கவில்லை…
உதட்டுவழி நிதானமின்றி
உரைத்திடவுமில்லை…

மரபு விதி மாறாமல்
குறிப்புணர்த்தினேன்…
நமது நிலை தாழாமல்
வலியுறுத்தினேன்…

கருத்து வழி யுத்தங்களும்..
கவிதை வழிச் சண்டைகளும்..
சபையொன்றில்
சர்வசாதாரணமானவை..

பிஞ்சு நடை பிறழல்கள்
வழமையானவையெனினும்
காலடிகள் கவனமென்ற
கருத்துணர்த்தினேன்….

நெடுந்தொலைவுப் பயணத்தின்
நிலைவாசலில் நிற்கிறோம்..
வழிகளில் பழி வரலாம்..
வாசலில் வரலாமா?????

வருத்திக் கொள்ள
சொல்லவில்லை…
திருத்திக் கொள்ளவே
சொன்னேன்……