Wednesday, May 5, 2010

என் மனமென்னும் காடு......

நாற்புறமும்
அகழியால் சூழப்பட்ட
கோட்டை போலவே
பொய்களால் வேயப்பட்ட
வேலிகளால் சூழப்பட்டிருக்கிறது
என் மனமென்னும் காடு.....

எண்ண விருட்சங்கள்,
ஆசை ஓடைகள்
அலங்கரிக்கும் காட்டில்
ரசனையெனும் பறவைகளோடு
வலம் வந்து கொண்டிருக்கின்றன
கோபமுடன் பொறாமை கலந்த
பொல்லாத மிருகங்கள்.......

அறிவுச் சூரியனின்
கதிர்கள் புகாதபடி
வளர்ந்து கிடக்கின்றன
ஆசை மரங்கள்.
ஆசை மரங்களின்
நிழல்களுக்குள்ளே
மண்டிக்கிடக்கின்றன
கொடிய விஷச் செடிகள்...

காட்டின் எல்லைகள்
கட்டுப்படுத்தவில்லை
என் ரசனைப் பறவைகளை...
அந்தப் பறவைகள்..
நீண்ட தொலைவுகளையும்
தொட்டுத் திரும்புகின்றன....

கோப மிருகங்களின்
பந்தாட்டத்தில் பலியாயின
அவ்வப்போது
சில ஆசை மரங்கள்...
ஆனாலும் விழுதுகளைக் கொண்டே
விளைந்து விடுகின்றன மீண்டும்...

காடு திருத்திக் கழனியாக்கவே
அரும்பாடு படுகிறேன் நான்
வானம் பார்த்த விவசாயியாய்
தோல்விகளையும் ஏமாற்றங்களையுமே
சந்தித்தாலும்
அடுத்த பருவத்திலாவது
அறுவடை செய்யலாம்
என்று ஆறுதலடைகிறேன்....

அல்லவை நீக்கி நல்லவை
தளைக்கவே ஆசைப்பட்டு
விஷச் செடிகளை
வேரோடு பிடுங்குகிறேன்....
ஒவ்வொரு செடியும்
வலிகள் கலந்த அனுபவங்களோடே
விடை பெறுகின்றன....

தொடர் தோல்விகளால்
துவண்டு விடாமல்
வேதாளம் வென்ற விக்கிரமாதித்தனாய்
விடாது முயல்கிறேன்...
நம்பிக்கையை விடாது முயல்கிறேன்....

என்றாவது ஓர் நாள்..
காடு திருத்தப்படும்
கனவுகள் மெய்ப்படும்.
நிழல்தரு தருக்களோடு....
கனி தரும் செடிகளோடு....
தாகம் தணிக்கும் ஓடையோடு....
கூடி விளையாடும் விலங்குகளோடு....
பாடித்திரியும் பறவைகளோடு....

பூத்துக்குலுங்கும் கொடிகளோடு
பூரித்துக்கிடக்கும்
என் மனமென்னும் காடு......

No comments:

Post a Comment