Wednesday, May 5, 2010

காடுகளின் சுயசரிதம்......

முன்னொரு காலத்தில்
இந்த பூமியின் நிலமெல்லாம்
நான் வேரோடியிருந்தேன்....
உயிர்கள் ஒவ்வொன்றாய்
உருவாகிக்கொண்டிருந்தன
என்னுள்.....

உருவாகும் ஒவ்வொரு
உயிர்களுக்கும் நான் மட்டுமே
ஆதாரமாயிருந்தேன்....

எல்லாம் இனிதாய்த்தான் இருந்தன
மனிதன் என்னும் உயிர்
என்னுள் உருவாகும்வரை....

நான்கு காலில் நடந்திருந்தவன்
இரண்டு காலில் நிற்க்கத்தொடங்கிய போது
ஆரம்பித்தன எனக்கான
அழிவின் அறிகுறிகள்....

தொட்டிலில் இருந்து
கட்டில் வரையில்
தேவைப்பட்டேன் விதம் விதமாய்
நாகரீக பாதையில் அவன்
நடமாட நடமாட
என் பரப்பளவுகள்
குறையத்தொடங்கின....

கடவுள் தந்த ஆறாம் அறிவு
எனும் அபாயத்தை
அன்று முதல் உணர ஆரம்பித்தேன்....

சென்ற நூற்றாண்டுவரை
பாதியாய் இருந்த என்னை
விஞ்ஞானத்தின் துணையோடு...
இருந்த அறிகுறிகளே
இல்லாமல் செய்து விட்டான்....

என்னைமட்டுமே அறிந்த உயிர்கள்
அழிந்து போயின...
தப்பிப் பிழைத்தவை
மிருககாட்சி சாலையில்
வாழ வகையின்றி
வாடிக்கொண்டிருக்கின்றன.....

என் பரப்பளவை சுருக்கியவன்
என் அங்கங்களையும் சுருக்கிவிட்டன
போன்சாய் மரங்களாய்
பூரித்து கிடக்கிரேணாம்
அவன் வீட்டு அலங்கார தொட்டியில்..

உணவிலிருந்து
உயிர் பிரிந்தபின்னால் செல்லும்
பாடை வரை தந்தேன்....
தாயின் பாசத்தோடு.....
அவனோ
நாகரீக காதலி கேட்டாள் என்று
என் அங்கங்கள் வாங்கிப்போனான்...
இன்றோ மீந்திருக்கும்
என் இதயமும் கேட்கிறான்....

கொடுக்க மறுத்தாலும்
பிடுங்கிப் போவான்....
எனவே தடுக்க நினைக்கவில்லை.....

ஆனால் என்ன
இதயம் தொடுமுன்னே
இடறி வீழ்கிறான்
தாங்கிப்பிடிக்க நினைத்தாலும்
இயலவில்லை....ஏனெனில்
அவன் காதலி அணிந்திருப்பது
என் அங்கங்கள் ஆயிற்றே....

என் அடையாளங்களில் மீந்திருக்கும்
இறுதி மரத்தினைக்கொண்டு
தயாரித்த காகிதத்தில்
நாளை முழக்கமிடுவான்
மரங்களை வளர்ப்போம் என்று....

காகித உருவில்
நான் கண்ணீர் சிந்துவேன்
மகனே என் மகனே
உன் வாழ்வு சிறக்க
என் வாழ்வை ஈந்தேன்
உன் வாழ்வு சிறக்கவில்லை
என் தியாகம் வீண் என்று....

No comments:

Post a Comment