Wednesday, May 5, 2010

இரவில் மழை இன்னும் அழகு....

மழை பெய்து..
மண் இளகி..
மரங்கள் கூட
மௌனங்களோடு
மகிழ்ந்திருந்த
குளிர்ந்த இரவு....

மின்மினிப் பூச்சிகள்
விளக்கணைத்து தூங்கின...
சில்வண்டுகளின் ரீங்காரம் கூட
சிறிதேனும் கேக்கவில்லை....
தூரத்து குட்டையில்...
துணை தேடும்
தவளைகளின் சத்தம் மட்டுமே..
இரவின் தனிமைக்கு துணையாய்....

மழை ஈரம் சுமந்த
காற்றின் விசாரிப்பில்...
மணம் மறந்து குவிந்திருந்தன
செடியில் பூக்கள்....
நட்சத்திரங்களின்
கண்சிமிட்டல் விசாரிப்பில்
நாணத்தோடு அலைந்திருந்தன
நீர்மேகங்கள்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்...

நிலத்தில் கால் வைக்க
உச்சிக்கு ஏறியது..
மழை நீரின் குளிர்...
புதிதாய்க் குழந்தை பெற்ற
தாய் போல
பூரித்துக் கிடந்தது பூமி...

மழை அழகு...
இரவில் மழை இன்னும் அழகு....
மழை பெய்த இரவு.....
மிக மிக அழகு....

No comments:

Post a Comment