Wednesday, May 5, 2010

சுயங்கள் கொண்ட முரண்கள்........

மழை நாளின்
அந்தி வேளையில்
மழை நீரோடும்
மண் மணத்தோடும்
சந்தித்துக்கொண்டோம்......

மழை நீரில் நனைவது
பற்றி நனையாமல்
பேசிக்கொண்டிருந்தோம்...
ஆனால்...
நட்பெனும் பெருமழையில்
நனைந்து கொண்டிருந்தோம்....

உதடு தாண்டிய
வார்த்தைகளுக்குள்
ஒப்பு நோக்கிக்கொண்டோம்
உனக்கும் எனக்குமான
குணங்களையும் நலன்களையும்....

அதே நேரம்
உள்ளத்துக்குள்
குழி தோண்டி
புதைத்து வைத்திருந்தோம்..
உனக்கும் எனக்குமான
சுயங்களையும் முரண்களையும்....

பெருமழையின் பின்
நனைந்து கனிந்த
நிலம் போல
சில நாட்கள்,வாரங்கள்
இனித்து கிடந்தது
நம் நட்பு...

வெயில் காய காய
பாளம் விடும் பூமியாய்..
நாட்கள் செல்ல செல்ல
வெளிப்பட்டன
நீயும் நானும்
நமக்குள் புதைத்திருந்த
சுயங்கள் கொண்ட
முரண்கள்......

உனதும் எனதுமாய்..
இருவரின் சுயங்களும்
உரசும் நேரத்தில்
வெளிப்படும்
பொறிகளின் வெப்பத்தில்
குளிர் காய
காத்துக்கிடக்கின்றன
பிரிவின் வலிகள்........

நட்பெனும் பெருமழையில்
நனைந்தவாறே
இருப்பதால்
இதுவரை
முரண்களின் உரசல்கள்
உணரப்படவில்லை......

என்றாலும்...
வா.....
உள்ளத்துப் புதையலை
உதடுகள் தாண்டவிட்டு...
இட்டு நிரப்புவோம்...
நமக்குள்ளான
சுயங்கள் கொண்ட
முரண்களின் இடைவெளியை.....

No comments:

Post a Comment