Wednesday, May 5, 2010

மனதின் வலிகள்....

மௌனங்களால்
நிறைந்திருக்கிறது
மனதின் வலிகள்....

தனிமை எனும்
நீர்க்குளத்தில்
தனித்தே
தவமிருக்கிறது
ஆழ் மன விசாரங்கள்....

ஆறிப்போன தழும்பை
தேடிப்பிடித்து
கீறிப்பார்க்கும்
சுயவிரக்கங்கள்....

ஆனந்தமாய் வந்த
காற்றுகூட முகப்பூவின்
வறண்ட புன்னகை கண்டு
வாடிப்போகிறது....

இரவில் விளக்கணைத்து
இருட்டோடு ஒப்பாரி வைத்தே
கழிகிறது நேரங்கள்
கவனிப்பார் யாருமின்றி....

உணவையும் உறக்கத்தையும்
ஒரு சேர ஒதுக்கிவைத்து
பசிக்கு துக்கத்தையே
பரிமாறிக்கொண்டிருக்கிறது.....

விழிகளில் விதைத்திருந்த
காட்சிகளின் விதைகள்
கண்ணீர்ப்பூக்களையே
கணக்கின்றி விளைவிக்கின்றன....

நெருப்புக்கோழியாய்
மண்ணுக்குள் முகம்
புதைத்துக்கொள்ளவே
தவிக்கிறது மனது....

சுற்றம் தவிர்த்து
சோகங்களுக்குள் சுருண்டு
கொள்கிறது
நத்தையாய்.....

கவலைகளோடு
கவனிக்கிறது அறிவு...
காலம் மாற்றும் என்ற
நம்பிக்கையோடு.....

No comments:

Post a Comment