Monday, November 16, 2009

மழை பெய்த வானம்
நன்கு நனைந்த பூமி

மெல்லிய தூறல்களால்
மிதக்கிறது மனது
தொட்டாச் சிணுங்கி போல
துவல்கிறதே அவ்வப்போது
எது தேடி அலைகிறது
இடைவிடாமல்........??????????

எண்ணவியலாத உறவுகளையா..?
எண்ணுமளவு இல்லாத நட்புகளையா?

இருப்பதும் பிடிக்காமல்
இருக்கவும் பிடிக்காமல்
நொடிக்கு நொடி மாறுகின்றதே?

பொன்னோடு பொருள் வேண்டியா ?
புகழோடு அருள் வேண்டியா?
மண்ணோடு இல் வேண்டியா?
மனம் நிறைய மகிழ்ச்சி வேண்டியா?

பொன்னோடு புகழ் வேண்டின்
புனைவேன் பொய்கள் பல
புகழோடு அருள் வேண்டின்
செல்வேன் கோவில் பல
மண்ணோடு இல் வேண்டின்
மிகுவேன் ஆசை பல
மனமொடு மகிழ்வு வேண்டின்
தேடுவேன் வேறு பல

நல்லதொரு தோழமை வேண்டியே
நாடினேன் நட்பு பல
நாடி வரும் தொல்லையென்று
நகர்வோரின் நட்பென்றாலும்
நட்பென்ற காரணத்தினால் நாடினேன்
நாளும் நாளும்

பொய்யுரையும் புனைவுரையும்
நெஞ்சினிக்க புகழுரையும்
புகல்வேனல்லன்

உள்ளமது கள்ளமில்லை
உணர்வுகள் பொய்யுமில்லை
தன்னொழுக்கம் தவறி
தடுமாறும் சூழலில்லை

ஆனாலும்

எதுவொன்றோ குறைய
தேடுகின்றது மனது
மழை விட்ட வானத்துக்கும்
நனைந்துவிட்ட பூமிக்குமிடையில்
சில்லென்ற காற்றாய்.......

No comments:

Post a Comment