Monday, November 16, 2009

நீயும் நானும்
உரையாடிக்கொண்டிருந்தபோது
நம்மோடு
உறவாடிக்கொண்டிருந்தது
நம்மீதான நம் காதல்...

உன்மீதான என் அக்கறையும்
என் மீதான உன் அக்கறையும்
மௌனமாகவே
மொழிபெயர்க்கின்றன
நம் காதலை......

இருவருக்குமான உறவை
நட்பென்று நாம் சொன்னாலும்
நட்பே கேட்கிறது நம்மை
நீங்கள் சொல்வது
நிஜமா என்று..?

உண்ணா பகலும்
உறங்கா இரவுமாய்
எனதும் உனதுமாய்
இருவரின் பொழுதுகளும்
பரிகசிக்கின்றன நம்மை நோக்கி...

சொல்லாத காதலின்
சுகமான வலிகளோடே
மெல்லமாய் பிரிகிறது
உதடுகள் புன்னகையாய்...
உன்னிடம் மட்டும்...

இன்றேனும் சொல்லவேண்டும்
என்று உறுதியோடு வந்தாலும்
ஓடி ஒளிகின்றன வார்த்தைகள்
ஊமையான உள்ளத்துக்குள்
என்ன செய்ய....?

நீரில் கலந்த மீனின்
கண்ணீர் போலவே
உன்னுள் கலந்த என் காதலும்
என்னை தவிர
யாருக்கும் தெரியாமல்...........

No comments:

Post a Comment