Wednesday, November 16, 2011

உன் நினைவுகள் போதுமடி............

மண்கோட்டை எனத்தெரிந்தும்
மலையளவு கட்டி வைத்தேன்
உயிர்க்கோட்டை கருகக்கருக
உணர்வுத்தீ எரிய வைத்தேன்....

பலிக்காத கனவென்று-புத்தி
பழித்தே கூறினாலும்
புத்தியைப் புறந்தள்ளி
புதுக்கனவு நான் கண்டேன்.....

இரவு பகல் விழித்திருந்தேன்
பசி தூக்கம் தொலைத்திருந்தேன்..
கண்ட கனவு நனவாக
கடும் முயற்சி நான் கொண்டேன்....

உள்ளமதில் கள்ளமில்லா
உணர்வுகளில் பொய்யுமில்லா
உன்னோடு நான் வாழ
உயிர் வரை ஆசை வைத்தேன்...

கொண்ட நிலை தவறாமல்
கொள்கை குணம் மீறாமல்
எள்ளழவும் பிறழாமல்
உன்னைக் காதலித்தேன்......

உன் நிலை தனையறிந்தே-இன்று
உயிர் வதை தாங்கி நின்றேன்
என் நிலை தனையெண்ணி
ஏங்காதே கண்மணியே....

உயிர் கொண்ட காதலுக்கு
உடலங்கள் தேவையில்லை
உணர்வால் வாழ்ந்திருந்தும்
ஒழுக்கமதை மீறவில்லை....

கண்ணே கலங்காதே
யாவும் கடந்து போகும்
பெண்ணே வருந்தாதே
வலியெல்லாம் ஒரு நாள் தீரும்.....

புது வாழ்வு நீ தொடங்கி
புதுக்கனவு நீ கண்டுணர்ந்து
இன்பமாய் இல்வாழ்வில்
இணைந்திருக்க வாழ்த்துகின்றேன்...

உன் நினைவுகள் போதுமடி
நான் உயிர் வாழ்ந்திருக்க
என் கனவுகள் போதுமடி
என் காலம் கழிந்திருக்க...

உன் நலம் போதுமடி
என் நலம் சிறந்திருக்க
உன் சிரிப்பு போதுமடி
என் துக்கம் மறந்திருக்க..

என்னுடைய பிரார்த்தனையில்
உனக்கும் ஒரு இடமுண்டு
என்னுடைய காதலுக்கு
உனக்குமட்டுமே இடமுண்டு.......

No comments:

Post a Comment