Wednesday, November 16, 2011

என் நந்தவனப்பூக்கள்..............

அர்த்தமில்லா

வார்த்தைகளுக்குப்

பொருள் தேடியே

தொலைந்து போய்க்

கொண்டிருக்கின்றன

நொடிகளாய் ஆயுள்கள்.....



நிலைக்கண்ணாடியின்

பிம்பங்களாய்

நேரெதிராகவே நிகழ்கின்றன

முயற்சிகளால் விளையும்

நம்பிக்கையின்

விருட்சங்கள்.......



அழகிருந்தும் மணமில்லா

கனகாம்பரப் பூக்களாகவே..

முகம் மலர்ந்தும்

அகம் மறைத்துக் கிடக்கின்றன

என் நட்பு நந்தவனத்தின்

ஒரு சில பூக்கள்.....



தொலை நோக்குப்

பார்வையிகளிடையே

குறை நோக்கும் பார்வைகளால்

குறுகுறுத்து

பின் வாங்கும்

என் நட்புத் தென்றல்.....



வாடாமலிருக்க வேண்டும்தான்

அதற்காக என் நந்தவனத்தில்

செயற்கைப் பூக்கள் வேண்டாம்

இயற்கையில் வாசத்தோடு

மணித்துளிகளில் வாடினாலும்

அ(ன்பு)ப்பூக்களே வேண்டும..........



என் நந்தவனம்

கணக்கற்ற வாசமில்லா பூக்களால்

நிறைந்திருப்பதை விட

ஒரு சில பூக்களின் வாசங்களால்

நிறைந்திருந்தாலே

போதுமெனக்கு....



எண்ணிக்கையளவுகளில்

நம்பிக்கையில்லை எனக்கு

எண்ணங்களினளவில்

நம்பிக்கையெனக்கு....

தலைக்குச் சூடும் பூக்களைவிட

இறைக்குச் சூடும் பூக்களே

போதுமெனக்கு.....



ஏனெனில்

என் நந்தவனப்பூக்கள்

ரசிப்பதற்கும் பறிப்பதற்குமல்ல

அவை மதிப்பதற்கும்

துதிப்பதற்குமே.............

No comments:

Post a Comment