Wednesday, November 16, 2011

என் நட்புப் பூக்கள்.....

மேகங்களில் சூல்கொண்டு
மழையாய் பொழிந்து..
அருவியாய் விழுந்து..
ஆறாய்ப் பெருகி
ஓடி வருகிறது -என்
நட்பெனும் ஆறு....

கண்டங்கள் கடந்த
பந்தங்களோடும்...
தேசங்கள் கடந்த
நேசங்களோடும்..
அதில் மலர்ந்து வருகின்றன-என்
நட்புப் பூக்கள்.....

அன்பொன்றே
இணைக்கும் சங்கிலியாக...
உதட்டளவிலோ...
உயிரளவிலோ...
ஒன்றாய்க் கலந்தே...
உலவிக் கொண்டிருக்கின்றேன்....

அவ்வப்போது தடைகளாகும்
பாறைகளை..
தவிர்த்தோ..பொடித்தோ..
புரண்டோடி வருகிறது
என் நட்பெனும் ஆறு.....

ஐவகை நிலத்திலும்
ஆற்றுப் புனலாய்...
எந்தவொரு வீழ்ச்சியிலும்
தேற்றும் உறவாய்..
உணர்வுகள் யாவிலும்
உறைந்தே கிடக்கின்றன- என்
நட்பெனும் வசந்தங்கள்....

நிறையச் சிரித்து...
மறைவாய் அழுது...
குறையாப் பாசமும்
மறையா அன்புமாய்
என்னோடு
இயைந்தே மகிழ்ந்து
கிடக்கின்றன நான் கொண்ட நட்பூக்கள்....

நேசம் கொண்ட உறவுகளை..
வாசம் மிகுந்த நட்புக்களை...
வாசித்தும் நேசித்தும்
வாழ்ந்து கிடக்கிறேன் நான்
வாசம் வீசும் வனமாய்......

No comments:

Post a Comment