Friday, August 14, 2015

மனக்குதிரை..........................



நேசப் புற்களால்
நிரப்பப் பட்டு
காதல் வேலியிட்டு
அடைக்கப்பட்ட
என்
நினைவுகளின் வெளியெங்கும்

அலைந்து திரிந்து
கொண்டே இருக்கிறது
என்
மனக்குதிரை....
உன் நினைவுகளை
சுமந்தவாறே..........

விழி வழி காட்சிகளும்
கனவு வழி நீட்சிகளும்
இல்லாத
இயல்பின் வழிகளில்
கடந்து கிடக்கிறது
என் மனக்குதிரை.....
உனைக் காணும்
உத்வேகத்தோடு..............

என் மனக்குதிரை
விட்டுச் செல்லும்
குழம்படித்
தடங்களிலெல்லாம்
உன் பெயரொன்றே
பொறிக்கப் பட்டிருக்க.......

நீளும் சாலைகள் வழியே
ஓடும் மனக்குதிரை....
தன் கனவுகள் தந்த
கவிதைகளின் கால்களோடு...
கவிதைகள் எழுத வைத்த
உன் காதலின் தாபத்தோடு...

எவ்விதத் தடைகளையும்
எட்டித்தாவும்
என் மனக்குதிரை
உன் மௌனமெனும்
தடைகளிடம் மட்டுமே
மண்டியிட்டு நிற்கிறது.....

உடைத்தெறியும் வலிவுள்ளதுதான்
இருந்தும்...
உனைக்காயப்படுத்தா
காரணத்தோடே
காத்திருக்கிறது.....

உன் நினைவுகளை
மட்டுமே
சுமந்திருக்கும்
இந்த
மனக்குதிரை...
காத்துக் கிடக்கிறது
மாறாத காதலோடும்
நீங்காத நேசத்தோடும்......

விடையில்லா கேள்விகளுக்கு
சொந்தக் காரியே....
பாரதியின் கண்ணம்மாவாய்
எனக்குள் பதியப்பட்ட நீ
என் நினைவுகளை நெய்து
நேசப் பட்டாய் உடுத்திய நீ...

மௌனம் கலைக்கும்
நொடிகளுக்காகவே
காத்திருக்கும்
என் மனக் குதிரை
சுமந்து வரும்
உன் நினைவுகளின்
பாரத்திற்குள்
மறைந்திருக்கும்
நம் நேசத்தை......
மன்னித்தாவது போ..................

No comments:

Post a Comment