Wednesday, April 27, 2011

பரவாயில்லை போ....

வழியினில் வந்தவள்தான் நீ
என் வாழ்வின்
பாதியாகிப்போனாய்...
இன்றோ...
என் வாழ்வைப் பாதியாக்கிப்
போகிறாய்....
பரவாயில்லை போ.....

காதல்
உன்னையும் என்னையும்
சுற்றி லட்சுமணரேகையிட்டது...
விதி...
நம் இன்பங்களை மட்டும்
சிறையிலெடுத்தது......
நீயோ மீதமிருப்பதை
சிதையிலிடுகிறேன் என்கிறாய்...
பரவாயில்லை போ....

இரவாகிப்போன
என் வானெங்கும்
ஆங்காங்கே..
அவ்வப்போது
சில நட்சத்திரங்கள் மின்னினாலும்
நீ மட்டுமே
ஒற்றையாய் ஓளிர்ந்திருந்த
பௌர்ணமியானாய்...

பௌர்ணமிக்குப் பின்னால்
அமாவாசை வருமென
தெரிந்திருந்தும்
அது பற்றி யோசிக்க
மறந்திருந்தேன்....
வளர்பிறையாய் வந்த நீ
தேய்பிறையாகவும்
நினைவுபடுத்திப் போகிறாய்.....
பரவாயில்லை போ...

உன்னால் உயிர்த்தெழுப்பப்பட்ட
என் காதலும் கனவும்
உதிர்ந்து போகலாம்
என்ன செய்ய
ஒரு பயனும் இல்லாமல்
உதிர்வதற்காகவே
மலர்ந்த மலர்களில் ஒன்றாய்
என் காதலும் கரைந்தே போகட்டும்......
பரவாயில்லை போ.....

நிஜங்களைத் துரத்திவிட்டு
நிழல்களைக் கைக்கொண்டு
வாழ நினைக்கிறாய் நீ...
உனக்குப் புரியுமா...??
என்றாவதொருநாள்
நிழல்கள் கலைந்து
நிஜங்களைத் தேடும்போது
அது கிடைக்கவே கிடைக்காது
என்பது.....

விருப்பத்தோடே
விலகுகிறாய் எனில்
ஒன்று மட்டும் தந்துவிட்டுப் போ...
எனக்காக என்னிடமிருந்து
நீ பெற்ற சில
வாக்குறுதிகளை
மட்டுமாவது.......
அவையாவது என்னோடிருக்கட்டும்.....
இறுதிவரை.....இணைபிரியாமல்.....

No comments:

Post a Comment