Wednesday, April 27, 2011

என் நட்பெனும் பரப்பு....

நீண்டு கிடக்கும்
மாலைப் பொழுதின்
நிழல் போல
மனமெங்கும்...
விரிந்து கிடக்கிறது
என் நட்பின் பரப்பு.....

அதில் விளைந்திருகும்
என் நட்புக்கள்
என்னோடு முரண்பட்ட
காலங்கள் அனைத்தும்
உதிர்ந்து கிடக்கின்றன
காய்ந்த சருகுகளாய்....

சிரிப்பு மழையில்
நனைந்து கொண்டும்
விவாத வெயிலில்
காய்ந்து கொண்டும்
ஒவ்வொரும் மரங்களும்
பசுமை பூத்தே நிற்கின்றன.......

அன்பெனும் தேவதை
அவ்வப்போது
ஆசி புரிந்து போனாலும்
வம்பெனும் சாத்தான்
வந்து போகிறான்
என் வார்த்தைகளின் வடிவில்...

முகம் பார்க்காத
என் நட்புமரங்கள்
அச்சமயங்களில்
நவக்கிரகங்களாய்
திரும்பிக் கொள்கின்றன
என்னுடன்.....

நல்லவனைத் தேடிய
துரியனாய்..
கெட்டவனைத் தேடிய
தர்மனாய்
நானும் என் நட்பை
தேடிக் கொண்டேயிருக்கிறேன்...

சிறகுகள் சுமையென
பறவைகள் சொல்லுமோ...
உதிர்ந்த இலைகளையும்
உரமாக்கிக் கொள்ளும்
என் நட்புமரங்கள்
கிளைகள் சுமையென சொல்லின...

ஒவ்வொரு கிளையாய்
உதிர்த்து உதிர்த்து...
ஒற்றை உடலும்
காற்றில் பறக்க....
கலைந்து போயின
என் நட்பின் தோட்டம்......

உதிர்த்த கிளைகளும்
மிச்சமிருக்கும் வேர்களுமாய்..
பிளந்து கிடக்கிறது
என் நட்பெனும் பரப்பு....
என் வார்த்தைச் சாத்தான்
வாய்ப்பிழந்து போனான்

அப்பொழுதும்...
அன்பெனும் தேவதை
ஆசிர்வதித்துப் போனது.....
என் நட்புப் பரப்பையும்
அதில் அமிழ்ந்து கிடக்கும்
வேர்களையும் கிளைகளையும்.........

No comments:

Post a Comment