Friday, August 14, 2015

கடந்த காதல்க(ள்).......

அலையலையாய் கிளம்பிய
அவசர நினைவுகளுக்குள்
தொலைந்து போனது
என்னுள் பூத்த நொடிகள்....

கடந்த காலங்களில்
நான் கடந்த காதல்களில்
நெகிழ்ந்த மணித்துளிகள்
புதைந்து கிடக்கின்றன.....

ஐந்தாம் வகுப்பிலிருந்து
ஆரம்பித்த அந்த ஆச்சரியம்
வளர்ந்து கொண்டே இருக்கிறது
தடுப்பணைகள் தாண்டி......

புரியாத பிரியங்களில்
மூழ்கிக் கிடந்த காலங்கள்....
வளர்ச்சிக்குத் தக்கவாறு
மலர்ந்திட்ட தருணங்கள்......

நட்புக்கும் காதலுக்கும்
நடுவில் நின்று
கனவுகளாலும் கவிதைகளாலும்
தடுமாறிய பருவங்கள்.....

வயதொன்று கூட
வரியொன்று கூடும்
தென்னையாய்........
ஒவ்வொரு காதலின் பின்னும்...
அனுபவங்களைக் கூட்டிக்கொண்டு...

எல்லோரையும் போலவே...
எனக்கும் காதலினால்..
வசந்தங்களும் உண்டு
வருத்தங்களும் உண்டு...

வசந்தங்களுக்குப் புன்னகைத்து..
வருத்தங்களுக்கு அழுதோய்ந்து
இயல்புக்கு திரும்பும்போதெல்லாம்
எட்டிப்பார்க்கும் இன்னோர் காதல்.....

ஒவ்வொரு முறை மலரும்போதும்
இந்தச் செடியில்
இதுவே கடைசி மலர்
என்றே கருதுகிறேன்.....

உதிர்ந்தபின் உதிக்கும்
இன்னொரு மலர்
புன்னகையோடு புறந்தள்ளுகிறது
என் கருத்துக்களை......

இன்னும் மலரலாம்
ஏராளமான பூக்கள்....
என் இதயப்பூஜைக்கென...
ஆயினும்....

நானே காதலிக்காத என்னை
வலிக்க வலிக்க
காதலித்த பூக்கள்
இன்றெங்கோ வாசம் பரப்பியபடி.....

கடந்தே போகத்தான்
காத்திருக்கிறேன்....
நான் கடந்த காதல்களையும்
எனைக் கடந்த காதல்களையும்........

No comments:

Post a Comment