Tuesday, June 15, 2010

நீ + நான் = நட்பு......

நான் சகுனியுமில்லை
நீ தர்மனும் இல்லை
நட்பு சதுரங்கத்தில்
நம்மை வைத்து சூதாட.........

உன்னோடு தேவர்கள் இருக்கலாம்
என்னோடு அசுரர்கள் இருக்கலாம்
ஆனாலும் நீ வாமனனும் இல்லை
நான் மாவலியும் இல்லை
என்னிடம் நீ கேட்டு
நான் தர................

நான் கர்ணனும் இல்லை
நீ துரியோதனனும் இல்லை
அங்க தேசத்தை நீ தரவும்
செஞ்சோற்று கடன் நான் தீர்க்கவும்...........

இருவரும் சாதாரண
மனிதர்கள் மட்டுமே.......
உணர்வுச் சுழல்களில்
உழல்பவர்கள் தானே.......

வெறுப்பது மனித குணம்
பொறுப்பது தேவ குணம்
விரும்புவது தெய்வ குணம்
இருந்தாலும்
நாம் மனிதர்கள்தானே........

நான் தேவனாகவுமில்லை
நீ தெய்வமாகவுமில்லை
என்றாலும்…
நண்பர்களாக இருக்கிறோம்…

வாய் தவறிய
வாரத்தைகளுக்கு
வருத்தம் தெரிவித்துக் கொள்வோம்
வழி மாறிய பாதையினை
செப்பனிட்டுக் கொள்வோம்…

கொள்கைகள் வேறுபடலாம்
குணங்களும் மாறுபடலாம்
இருந்து விட்டுப் போகட்டுமே…
நண்பர்கள்தானே…
நட்போடிருக்கலாம்…

உனதும் எனதுமான
ஒவ்வாத கொள்கைகளை
ஓரங்கட்டுவோம்…
நட்பாய் புன்னகைத்து..
நட்பாய் அரவணைத்து…
நட்பை புனரமைப்போம்…
நாளை நமதே என்ற நம்பிக்கையுடன்….

No comments:

Post a Comment